ஆர்.கே.நகர் தோல்வியால் ஈ.பி.எஸ். உடன் மோதும் மதுசூதனன் - உட்கட்சி பூசலா?

ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி குறித்து ஆலோசிக்காதது ஏன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவைத்தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியடைந்தது ஏன்...? இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக்காதது ஏன்? எனது தோல்விக்கு யார் காரணம்.

தோல்விக்கு காரணமான கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நான் வெற்றி பெற்றிருந்தால் அது கழகத்தின் வெற்றியாக இருக்கும். நான் தோற்றது கழகத்தின் தோல்விதானே?

திமுக தனது தோல்வி குறித்து ஆராய்ந்து தேர்தலில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை கூண்டோடு நீக்கியுள்ளனர். ஆனால் இப்போது வரை தோல்வி குறித்து அதிமுக எந்த ஆய்வு கூட்டமும் நடத்தவில்லை.

எனது கேள்விகள் குறித்து திருப்திகரமான பதில் தரவில்லை எனில் எனது முடிவு தன்னிச்சையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடிதத்தில் முதல்வரிடம் மதுசூதனன் 14 கேள்விகள் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவைத்தலைவர் மதுசூதனனின் இந்த திடீர் கடிதத்தால் அதிமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

More News >>