எடப்பாடியை சந்தித்தது இதற்குத்தானா?- எம்எல்ஏக்களை கோபப்படுத்திய விஜயதரணி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைப் பேசப் போனால், மகள் திருமணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார் விஜயதரணி. இப்படியிருந்தால் எப்படி? எனப் புலம்பி வருகின்றனர் கதர்ச்சட்டை பிரமுகர்கள்.

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கு உள்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டாலும், ஆட்சிக்கு ஆபத்து இல்லை என நெருங்கிய வட்டாரத்தில் தொடர்ந்து பேசி வந்தார் எடப்பாடி. இதற்கு முக்கியக் காரணமே, காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான எம்எல்ஏக்கள் எடப்பாடியை ஆதரிக்கிறார்கள் என்பதுதான். தினகரனைப் போலவே காங்கிரஸ் கட்சியிலும் ஸ்லீப்பர் செல்களை வைத்திருந்தார் எடப்பாடியார். அதனால்தான், தீர்ப்பு குறித்த எந்தவித பயமும் இல்லாமல் இருந்தார். இந்த ஆட்சி கவிழ்ந்து தேர்தலை சந்திப்பதைவிடவும் ஆளும்கட்சிக்கு அணுக்கமாக இருந்து வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்துவிட்டனர். அதனால்தான், காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஸ்டாலின் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. சட்டமன்றத்தில் கேள்வி நேரம் வரும்போதும் காங்கிரஸ் கூடாரத்துக்கு எந்தத் தகவலையும் சொல்லாமல் தவிர்த்து வந்தனர் திமுகவினர்.

இந்தநிலையில் இன்று மதிய உணவு நேரத்தில் சபாநாயகர் தனபாலைப் பார்த்தனர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள். ஏற்கெனவே, சபாநாயகர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் விஜயதரணி. இந்த சந்திப்பில் நேரடியாக மோதல் வெடிக்கலாம் என எதிர்பார்த்த நிலையில், சபையைக் கூட்டுவது தொடர்பாக அவர்கள் கொடுத்த மனுவை வாங்கிக் கொண்டார் தனபால். இதனை அடுத்து எடப்பாடியின் அறைக்குச் சென்றுள்ளனர். அங்கு டீ, காபி உபசரிப்போடு எம்எல்ஏக்களை வரவேற்றிருக்கிறார். கஜா புயல் பணிகளில் சுணக்கம் காட்டுவது, மேக்கேதாட்டு அணை சம்பவத்தில் அலட்சியம் எனக் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் கோபம் காட்டியுள்ளனர். ஆனால், விஜயதரணியோ புன்சிரிப்போடு எடப்பாடியிடம் பேசியிருக்கிறார். ' என் பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். அவசியம் வந்துருங்க' எனக் கூறியிருக்கிறார். எடப்பாடியும், அதற்கென்ன...நிச்சயம் வந்துடறேன் எனக் கூறிவிட்டார். 'மக்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறுவதற்காக அப்பாயிண்மென்ட் வாங்கிட்டு வந்தால், கல்யாண பத்திரிகையைக் கொடுக்கும் சாக்கில் கூடவே வந்துட்டாங்க' எனக் கமெண்ட் அடித்தார்களாம் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்.

-அருள் திலீபன்

More News >>