ட்ரோன் பறக்க விடுவதற்கான புதிய விதிமுறைகள் - மத்திய விமான போக்குவரத்து துறை

‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

"ட்ரோன்" எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை உளவு பார்ப்பது, காணொளி மற்றும் புகைப்படம் எடுப்பது என்பது போன்ற பல தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆளில்லா விமானங்களில் ஏரோ மாடலிங், ட்ரோன், யுஏவி என 3 வகைகள் உள்ளன. சந்தைகளில் அதிகமாக விற்கபடுகின்ற விளையாட்டு என்றால் அது ஏரோ மாடலிங் வகையை சேர்ந்த விளையாட்டுகள் தான்.

ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை விற்கபடுகின்ற இவைகளை பலரும் வாங்கி உயரத்தில் பறக்கவிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் ஆளில்லா விமானங்களை தொழில்ரீதியாக பயன் படுத்தும்போது காவல் துறையினரிடமும், விமான போக்குவரத்துத் துறையிடமும் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். இதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

ட்ரோன்கள் அடையாள எண், ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி ஆகிய சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். ட்ரோன்களை நேனோ, மேக்ரோ, மீடியம், சிறியது, பெரியது என அதன் எடைகளை கொண்டு 5 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களைப் பறக்கச் செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம்.

அதே போன்று ட்ரோனை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இயக்க வேண்டும். 10-ம் வகுப்பில் ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்று, சிவில் விமான போக்குவரத்து விதிகள்படி பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். ட்ரோனின் உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லும்.

பகல் வேளையில் மட்டுமே ட்ரோன்களை இயக்க முடியும். கட்டாயம் காப்பீடு செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் ஒருவர் ஒரு ட்ரோனுக்கு மேல் அதிகமாக இயக்க அனுமதிக்கப்படாது.

பெருநகர விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மற்ற விமான நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ட்ரோனை இயக்க அனுமதி கிடையாது. சர்வதேச எல்லைப் பகுதி, கடற்கரையில் இருந்து 500 மீட்டரைத் தாண்டி ட்ரோனை இயக்க முடியாது.

மேலும், ட்ரோன்களை டெல்லியின் விஜய் சவுக் பகுதி, தலைமைச் செயலகங்கள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகிய இடங்களின் சில பகுதியில் இருந்து இயக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>