20 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 18-ல் திமுகவுக்கு வெற்றி- வைகோ பேச்சால் மீண்டும் சலசலப்பு

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் காலியாகி உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் 18-ல் திமுக வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

லோக்சபா தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக அணியே வெல்லும்.

20 தொகுதி இடைத் தேர்தல்களில் 18-ல் திமுக வெல்லும். எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதை திமுக தலைமைதான் முடிவு செய்யும்.

ஸ்டெர்லைட் நாசகார ஆலையை மீண்டும் திறக்கப் போகிறார்கள். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல இருக்கிறோம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

திமுகவினரைப் பொறுத்தவரையில் 20 தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெல்வோம் என பேசி வருகின்றனர். ஆனால் வைகோ 18 தொகுதிகளில்தான் திமுக வெல்லும் என பேசியிருப்பது அந்த கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>