2018ம் ஆண்டு சிறந்த எம்.பிக்கான விருது: கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2018ம் ஆண்டு சிறந்த பெண் எம்.பிக்கான விருது பெறும் திமுக எம்.பி கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரபல செய்தி நிறுவனமான லோக் மால்ட் சார்பில் ஆண்டுதோறும் நாடாளுமன்ற விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இந்தாண்டு வரும் 13ம் தேதி டெல்லி அம்பெத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறுகிறது.

இந்த விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்ற குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. குறிப்பாக, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி தலைவராக உள்ள இந்த குழுவில் டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் கவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி.ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே.துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாளாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 2018ம் ஆண்டு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதை திமுக எம்.பி கனிமொழிக்கு வழங்கப்பட இருப்பதாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து குழு சார்பில் கூறுகையில், "நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி மகத்தான பங்காற்றியுள்ளார்.

ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

கனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தியாகவும் திகழ்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த விருதை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு வரும் 13ம் தேதி வழங்க இருக்கிறார்.

மேலும், சிறந்த எம்பிக்கான விருது பெறும் கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

"2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் திருமதி @KanimozhiDmk அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். கழக விறி-க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது! அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்" என்று மு.க.ஸ்டாலின தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

More News >>