வென்றது கழிவறை போராட்டம்: தூய்மை இந்தியா திட்டத்தின் தூதரான ஆம்பூர் சிறுமி!

கழிவறை கட்டித்தராத தந்தை மீது சிறுமி போலீசில் புகார் அளித்த செய்தி வரவியதை அடுத்து, சிறுமியின் வீட்டில் கழிவறை கட்டித்தர நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலிதொழிலாளியான இவரது மகள் ஹனீபாஜாரா (7). ஆம்பூரில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா வீட்டில் கழிவறை வசதி இல்லை. இதனால், குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவது அசவுகரியமாகவும், அவமானமாக இருப்பதாகவும் கருதிய சிறுமி, தனது தந்தையிடம் கழிவறை கட்டிக் கொடுக்கும்படியும் பல முறை கூறியுள்ளார்.

ஆனால், படிப்பில் முதல் இடம் பெற்றால் கழிவறை கட்டித்தருவதாக ஹனீபாஜாராவிடம் அவரது தந்தை கூறியுள்ளார். இதனால், ஹனீபாஜாராவும் எல்கேஜி முதல் 2ம் வகுப்பு வரை படிப்பில் முன்னிலையில் இருந்துள்ளார்.

ஆனாலும், கழிவறை கட்டித்தராததால் கோபமடைந்த சிறுமி கழிவறை கட்டிக்கொடுக்க மறுக்கும் தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் தெரிவித்தார்.

சிறுமியின் இந்த செயலை கண்டு வியந்த போலீசார் மற்றும் சிறுமியின் பெற்றோர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினர். பின்னர், சிறுமி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார்.

இந்நிலையில், சிறுமி ஹனீபாஜாரா தனது வீட்டில் வழிவறை கட்டித்தர எடுத்து வரும் முயற்சி குறித்து அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, ஹனீபாஜாரா வீட்டில் உடனடியாக கழிவறை கட்டும் பணியை நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

சிறுமி ஹனீபாஜாராவை பாராட்டிய மாவட்ட கலெக்டர் அவரை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக அவரை நியமித்து உத்தரவிட்டார்.

More News >>