அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு- ராயப்பேட்டையில் சோனியா பங்கேற்கும் பொதுக் கூட்டம்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி  ராயப்பேட்டையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முத்தமிழறிஞர், தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை வருகிற 16-12-2018 அன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் முன்னிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி. சோனியா காந்தி அம்மையார் அவர்கள் திறந்த வைக்கப்படுவதை முன்னிட்டு;

இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில், தலைமைக் கழகத்தால் ‘சிறப்பு அழைப்பாளர்’களாக அழைக்கப்பட்டுள்ள முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள தலைவர் கiஞைர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடைபெறும் இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைத்தவுடன், திருமதி சோனியாகாந்தி அம்மையார், தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் மற்றும் வாழ்த்துரை வழங்க உள்ள ஆந்திரமாநில முதலமைச்சர் மாண்புமிகு நா.சந்திரபாபுநாயுடு, கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு கு.பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்புமிகு வி.நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும்.

எனவே, கழக நிர்வாகிகள் - தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

More News >>