ஆஸி.யில் தமிழை பாடமாக எடுத்து முதல், 2-வது இடம் பெற்ற தமிழ் மாணவர்கள்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 புள்ளிகளை ஹரிஷ்ணா செல்வவிநாயகன், இரண்டாம் இடத்தை 94புள்ளிகள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலன் ஆகியோர் எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகன் ஹரிஷ்ணா. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வென்ற்வேர்த்வில் தமிழ் பள்ளியில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது உங்கள் மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டபொழுது. நான் முதன் முதலாக மனதார பகிர்ந்துகொண்டவர்கள் எனது அன்பு பெற்றோரும், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் எனது குரு நவரட்ணம் ரகுராம் ஆசிரியரும் என்கிறார் ஹரிஷ்ணா பெருமையோடு.

ஒவ்வொரு பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரினால் கௌரவிக்கப்படுவது மரபு, அதற்கமைய இவர்களிற்கான பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை அன்று யுஎன்எஸ்டபிள்யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

சான்றிதழ்களை பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்திருந்தார். வீட்டிலும், வெளியிலும் தமிழ் நண்பர்களுடன் இயன்றளவு தமிழில் பேசுங்கள் என இளையோர்களிற்கு அறிவுரை கூறும் இவர், தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்திய பெற்றோர்களிற்கும் நன்றிகளை கூறத் தவறவில்லை.

தனது நண்பர்களும், ரகுராம் ஆசிரியரும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் இந்த நிலையில் நிற்பதாக பெருந்தன்மையோடு கூறுகின்றார்.

இது தொடர்பாக ஹரிஷ்ணா அளித்துள்ள பேட்டி:

கேள்வி: நீங்கள் முதலிடம் பெற்ற செய்தி கிடைத்த போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது.?

பதில்: அடக்க முடியாத ஆனந்தம். அந்தச் செய்தியை கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. இது கனவா? நனவா? என்று என்னையே பல தடவைகள் கேட்டேன். அந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

கேள்வி: இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?

பதில்: எனது திறமைகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், மற்றைய மாணவர்களின் திறமையை நான் அறியவில்லை. அத்தோடு, இந்த ஆண்டு வழக்கத்தை விட மிகக் கடினமாக படித்ததால் வேறு பள்ளி மாணவர்கள்தான் முதலிடம் பெறுவார்கள் என்று நினைத்தேன். அதனால், இந்த செய்தி எதிர்பார்க்காததுதான்.

கேள்வி: உங்களின் வெற்றிக்கு காரணமானவர்கள் யார்?

பதில்: எனது வெற்றிக்கு காரணமானவர்கள் எனது பெற்றோர், ஆசியர்கள் மற்றும் நண்பர்கள்தான். ஊக்கமளித்த பெற்றோரும் கல்வி புகட்டிய நண்பர்களும் ஆசிரியர்களும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்தார்கள். இவர்களிலும் முக்கிய பங்கை வகிக்கும் ஒருவர் ரகுராம் மாமா.

More News >>