ஊரெல்லாம் கம்பளி பூச்சிகள்! - உள்ளாட்சி அலட்சியத்தால் ஆவேசப்படும் தங்கச்சி மடம்

உள்ளாட்சிகளில் தனி அலுவலர்கள் கோலோச்சுவதால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர்கள் இல்லாததால் ஏற்பட்ட கொடுமையை கஜா புயலின்போது மக்கள் அனுபவித்தனர். எந்தவொரு வேலை என்றாலும், உள்ளாட்சி தனி அலுவலர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால் அனைத்து உள்ளாட்சிகளும் தினந்தோறும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகியோர் பதவி வகித்தபோது பொது, செலவுக் கணக்குகளுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறவேண்டும். வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளும் முன், அதற்கு ஒப்புதல் பெறவேண்டும். மாநகராட்சி அல்லது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வரிகளை உயர்த்த, இதுவரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வாக்கு அரசியலை கணக்கில் கொண்டு அவ்வாறு செய்தனர்.

தற்போது அரசின் ஆலோசனைப்படி தனி அலுவலர் ஒருவரே வரிகளை உயர்த்த ஒப்புதல் அளிக்கலாம். பொதுமக்கள் அந்தந்த பகுதி கவுன்சிலர்களை நாடி, தங்கள் பிரச்சினைகளைக் கூறி வந்தனர். இனி நேரடியாக மாநகராட்சி, நகராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகங்களுக்கு சென்று, தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். தாமதமானால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் உயர் அதிகாரியை சந்தித்து முறையிடலாம். அப்படி முறையிட்டு எந்தக் காரியங்களும் நடப்பதில்லை எனக் குமுறுகின்றனர் பொதுமக்கள்.

அதற்கு இன்றைய உதாரணம், ராமேஸ்வரம் நகராட்சிக்குட்பட்ட தங்கச்சி மடம். கடந்த சில நாள்களாக தங்கச்சி மடம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள ஆலமரத்தின் இலைகளைத் தின்று மொட்டையடித்துவிட்டது மயிர் பூச்சி என்று சொல்லப்படும் கம்பளி பூச்சிகள். இந்தப் பூச்சிகள் அக்கம் பக்கம் பகுதிகளுக்குப் பரவியதால், பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

அருகில் இருந்த பாலர் வாடி பள்ளியும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டது. பள்ளி முழுவதும் இந்த மயிர் பூச்சிகள் உலா வருகின்றன. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூச்சிகளை அப்புறப்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டுகிறோம் எனக் கடந்த ஒரு வாரமாக அந்த மக்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். இதனை தனி அலுவலர்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

-அருள் திலீபன்

More News >>