குட்கா ஊழல்: அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கர் டிஸ்மிஸ்? எடப்பாடி தீவிர ஆலோசனை!

குட்கா ஊழல் வழக்கில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கைதாவது உறுதியாகிவிட்டது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விஜயபாஸ்கர் முரண்டு பிடிப்பதால் அவரது பதவியை பறித்து அமைச்சரவையிலும் மாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி முடிவு எடுத்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோரிடம் டெல்லியில் இருந்து சென்னையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ உயர் அதிகாரிகள் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக சிக்கி இருப்பதால் சி.பி.ஐ.யால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் என்பதால் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைக்கு தகவலை பாஸ் செய்து காத்திருப்பதாக தெரிகிறது.

சமீப காலமாக அதிமுக அரசு மீது அதிருப்தியில் உள்ள மத்திய பா.ஜ.க அரசும் இதனையே அஸ்திரமாக்கி விஜயபாஸ்கர் மீதான நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டி விட்டது. இதன் தொடர்ச்சியாக விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க எடப்பாடிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் நெருக்கடி கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்தே நேற்று காலை விஜயபாஸ்கரை தனது வீட்டிற்கு அழைத்த முதல்வர் எடப்பாடி, விவகாரம் எல்லை மீறிப் போய் விட்டதால் தன்னால் இனியும் காப்பாற்ற முடியாது என்று கைவிர்த்துவிட்டாராம். மேலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்த, பதிலேதும் சொல்லாமல் முதல்வர் வீட்டை விட்டு விஜயபாஸ்கர் வெளியேற்னாராம்.

அதன் பின் விஜயபாஸ்கரை தற்போது வரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஆஜராக வேண்டிய விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.

இதனால் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யும் முடிவுக்கு எடப்பாடி தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் அமைச்சரவையையும் மாற்றியமைக்க எடப்பாடி முக்கிய அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், புதிய அமைச்சர் யார் என்ற ஆர்வமும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது

More News >>