லஞ்சம் வாங்குற அதிகாரிக்கு எதுக்கு மரியாதை வெளுத்து வாங்கும் கனா காட்சி!

கனா படத்தின் புதிய ஸ்நீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு எதுக்கு மரியாதை என்ற சாட்டையடி வசனம் இடம்பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கனா படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

இதுவரை வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் ஸ்நீக் பீக் காட்சிகள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

இந்த வார போட்டியில், கனா பாஸ் ஆவது மட்டுமின்றி நல்ல மதிப்பெண்ணையும் பெறும் என பலரும் கணித்து வருகின்றனர்.

விவசாயத்திற்காக கடன் கொடுக்க வரும் அதிகாரியிடம் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக நடித்துள்ள சத்யராஜ், மரியாதை கொடுத்து பேசுகிறார். முதல் காட்சியிலேயே கடன்காரன் தான வரான்.. கடவுள் இல்லையே என சத்யராஜின் மனைவி பேசும் வசனம் ஏழைகளை கடனுக்காக அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது இயக்குநருக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகிறது.

அடுத்ததாக 100 நாள் வேலைக்கு விவசாயிகள் போவதால் விவசாயம் பண்ண ஆளில்லை என அரசின் திட்டத்தை எதிர்த்து மீண்டும் குரல் கொடுக்கிறார் இயக்குநர். சர்கார் படத்தில் அரசின் திட்டங்களை அவதூறாக சித்தரித்ததாக கூறி ஏ.ஆர். முருகதாஸ் மீது வழக்குகள் பாய்ந்து வரும் நிலையில், இந்த வசனம் மியூட் செய்யப்பட்டாலும் படலாம்.

மேலும், வங்கி அதிகாரி சென்ற பிறகு, இளவரசு சத்யராஜிடம் ஒன்னு மரியாதை கொடுங்க இல்லை லஞ்சம் கொடுங்க என அரசியல் பன்ச் வசனத்தை அசால்ட்டாக சொல்லிவிட்டு செல்கிறார்.

நிச்சயம் இந்த காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல்கள் காதை கிழிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

More News >>