முற்றும் மோதல்! தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

தயாரிப்பாளர்கள் குழுவினர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் இருந்து வருகிறார்.பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது என பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒன்று திரண்ட தயாரிப்பாளர்கள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு விஷால் இல்லாததால் ஆத்திரமடைந்த குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டை போட்டு சாவியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில், இன்று காலை விஷால் மற்றும் ஆதரவு தயாரிப்பாளர்கள் தி.நகர் காவல் நிலையம் அருகே திரண்டனர். அங்கு, விஷால் போலீசாரிடம் சாவியை கேட்டுள்ளார். ஆனால், போலீசார் சாவியை கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால், விஷாலுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பிறகு, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நேற்று போடப்பட்ட பூட்டை உடைக்க விஷால் மற்றும் ஆதரவாளர்கள் முயன்றுள்ளனர். இதனால், விஷால் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>