இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 3 பட ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

முனி படத்தின் நான்காம் பாகமான காஞ்சனா 3 படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

பயம் மற்றும் காமெடி கலந்த பேய் பட ஃபார்முலாவை முனி படத்த்தின் மூலம் ராகவா லாரன்ஸ் ஆரம்பித்து வைத்தார். நடன இயக்குநராக, நடிகராக வலம் வந்த ராகவா லாரன்ஸுக்கு முனி மற்றும் காஞ்சனா படங்கள் மாபெரும் வெற்றி இயக்குநர் என்ற பட்டத்தை தேடித் தந்தன.

ஒரே மாதிரியான கதை என்றாலும், ஒவ்வொரு படத்தின் திரைக்கதை அமைப்பும், நகைச்சுவை கோர்ப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்து விட்டது.

கடைசியாக வந்த காஞ்சனா 2 திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்து மாபெரும் வரலாறை படைக்க, அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் காஞ்சனா ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

பிக்பாஸ் முதல் சீசன் முடிந்த போதே ஓவியாவை வைத்து படத்தை எடுக்க ராகவா லாரன்ஸ் தொடங்கினார். ஆனால், அதற்கு பிறகு படம் குறித்த எந்த பேச்சும் வெளிவரவில்லை.

அதற்கு மாறாக ஸ்ரீரெட்டி ராகவா லாரன்ஸ் மீது சொன்ன பாலியல் புகார் தான் வைரலானது. பின்னர், அவருக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருவதாக கூறிய ராகவா லாரன்ஸுக்கு ஸ்ரீரெட்டி நன்றி வீடியோ வெளியிட்டது வேறு கதை.

மேலும், கேரள வெள்ளம் மற்றும் கஜா புயலுக்கு பல கோடிகளை நடிகர் ராகவா லாரன்ஸ் வாரி வழங்கினார்.

இந்நிலையில், பேட்ட அப்டேட்ஸில் பிசியாக இருந்த சன் பிக்சர்ஸ் இன்று, திடீரென முனி 4ம் பாகம் எனும் காஞ்சனா 3 படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், வரும் 2019, ஏப்ரல் கோடை விடுமுறையில் திரைக்கு வரவுள்ளதாகவும் அறிவித்தது.

இதனால், காஞ்சனா ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். இந்த படத்தில் முனி படத்தில் நாயகியாக நடித்த வேதிகா மற்றும் ஓவியா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

More News >>