சரியென பட்டதை பயமின்றி பேசியவர் ஞானி - ரஜினிகாந்த் அஞ்சலி

தனக்கு சரியென தோன்றுவதை பயமின்றி பேசவும் எழுதவும் கூடியவர் என்று நடிகர் ரஜினிகாந்த் எழுத்தாளர் ஞானியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எழுத்தாளர் ஞானி சங்கரன்(63). செங்கல்பட்டை சேர்ந்த ஞானி, ஆங்கில இதழாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். பிரபல எழுத்தாளர், அரசியல் விமர்சகர், பத்திரிக்கை ஆசிரியர், நாடக கலைஞர், கட்டுரையாளர் என்று பன்முகம் கொண்டவர் ஞானி.

இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணத்தால் அவதிப்பட்டு வந்தார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஞானி மரணமடைந்தார். இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த், ஞானியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ”எழுத்தாளர் ஞாநியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஞாநி எனது நண்பர், நான் அவரது ரசிகன், தனக்கு சரியென தோன்றுவதை பயமின்றி பேசவும் எழுதவும் கூடியவர்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>