என்னை ஏமாற்றி விட்டார் சுசீந்திரன் நட்ராஜ் ஓப்பன் குற்றச்சாட்டு

இயக்குநர் சுசீந்திரன் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2002ஆம் ஆண்டில் விஜய்யின் யூத் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் நட்டி என்கிற நட்ராஜ். அதற்கு பின்னர் பாலிவுட்டில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் 2003ல் வெளியான பான்ச் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இந்தியளவில் மிகப்பெரிய ஒளிப்பதிவாளராக அறியப்பட்டார்.

தொடர்ந்து, பிளாக் ஃப்ரைடே, ஜாப் வி மெட், ஹல்லா போல், கோல்மால் ரிட்டர்ன்ஸ், ராஞ்சனா, புலி போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும், நாயகனாக மிளாகா, சதுரங்க வேட்டை, போங்கு, எங்கிட்ட மோதாதே போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

சதுரங்க வேட்டை படம் தான் இதில், வெற்றிப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் அவரது மேனேஜர் ஆண்டனி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தான் வாழ்நாளில் செய்த ஒரே தவறு ஜீவா படத்தில் ஒரு பாடலுக்கு அவர் இயக்கத்தில் நடித்ததே ஆகும் என பதிவிட்டுள்ளார்.

இதனால், கோலிவுட் திரையுலகம் அப்படி சுசீந்திரன் என்ன பண்ணினார் என்பதை தெரிந்துகொள்ள நட்டியை தொடர்பு கொண்டு வருகிறது.

More News >>