கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்: தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு மேல் சிகிச்சை

சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்த தானம் செய்த வாலிபர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியை சேர்ந்த வாலிபரின் உறவினர் பெண் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வாலிபர் ரத்த தானம் வழங்கினார். ஆனால், அந்த ரத்தத்தை அப்பெண்ணுக்கு ஏற்றவில்லை. இந்த ரத்தம் வங்கியில் இருந்து கைமாறி சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாத கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.

இதற்கிடையே, வெறிநாடு செல்ல முயன்ற அந்த வாலிபருக்கு உடல் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் அந்த வாலிபருக்கு எச்ஐவி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் சிவகாசி ரத்த வங்கிக்கு உடனே சென்று நான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று கூறினார்.

ஆனால், அதற்குள் கர்ப்பிணிக்கு எச்ஐவி கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றப்பட்ட தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த வாலிபருக்கு தெரியவந்ததை அடுத்து, மனவேதனையில் நேற்று காலை எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபரின் உறவினர்கள் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வாலிபரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

More News >>