முதுகுளத்தூரில் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவினர் கோஷ்டி மோதல் - நாற்காலிகளை வீசி எறிந்ததால் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனின் ஆதரவாளர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது தற்போதைய மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்கள் இடையூறு செய்துள்ளார். இதனால் முன்னாள், இந்நாள் மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது.

ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, நாற்காலிகளையும் சரமாரியாக வீசி எறிந்தனர். இதனால் கூட்டம் நடந்த இடமே போர்க்களமானது.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முன்னிலையில் திமுகவினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் முதுகுளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>