ஜெ. மர்ம மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கொளுத்திப் போட்ட சரவெடி!

ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை வழங்காததே அவருடைய மரணத்திற்கு காரணம். ஜெ. மரணத்தில் மர்மம் உள்ளதால் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். சிகிச்சை குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் உ ள்ளிட்டோர் மீதும் சி.வி.சண்முகம் அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ. மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. ஆணையத்தில் ஆஜராகி முரண்பட்ட தகவல்களை கூறியவர்களின் முகமூடிகளும் கிழிபடுகிறது. இதன் உச்சகட்டமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று அளித்த பேட்டி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே முதல் அமைச்சர், அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் வாசலில் தவம் கிடந்தோம். மருத்துவமனை உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அம்மா இட்லி சாப்பிட்டார், தோசை, உப்புமா சாப்பிட்டார் என்று கூறியதையெல்லாம் நம்பினோம். ஆனால் அம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்பது இப்போது உறுதியாக தெரிகிறது. மருத்துவர்கள் கூறியும் ஆஞ்சியோ கிராம் சிகிச்சை செய்யாதது ஏன்? வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என அமைச்சரவை முடிவு செய்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் தவறாக கூறியது ஏன்? இதன் பின்னணியில் உத்தரவிட்டது யார்? இதெல்லாம் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்து விசாரணை வளையத்தில் கொண்டு வரவேண்டும்  என்றும் சி.வி.சண்முகம் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார். மேலும் அப்போலோ மருத்துவமனையை சொகுசு விடுதியாக மாற்றி அம்மா பெயரில் ரூ 1 கோடிக்கு மேல்இட்லி, தோசை, உப்புமா சாப்பிட்டது யார்? என்றும் விசாரிக்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் வெடித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இந்த அதிரடிப் பேட்டி தமிழக அரசியலிலும், அதிமுக வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சி.வி.சண்முகத்தின் இந்தப் பரபரப்பு புகாரை அமைச்சர் ஜெயக்குமாரும் ஆதரித்துள்ளார். இதனால் ஜெ. மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டி அடுத்தடுத்து திடுக்கிடும் திருப்பங்கள் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.

More News >>