கேரளா குலுங்கியது! 650 கி.மீ. நீள பிரமாண்ட பெண்கள் சுவர் - 30 லட்சம் பேர் பங்கேற்பு!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற "பெண்கள் சுவர்" போராட்டம் நடைபெற்றது.
சபரிமலை ஐயப்oனன அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சபரிமலை வளாகமே போராட்டக்களமாகி விட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரின் எதிர்ப்பால் தரிசனத்திற்கு சென்ற பெண்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பிரமாண்ட பெண்கள் சுவர் போராட்டத்திற்கு ஆளும் இடதுசாரி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி இன்று மாலை கேரளாவின் வடக்கில் காசர்கோடு முதல் தெற்கே களியக்காவிளை வரை பெண்கள் சுவர் போல கைகோர்த்து அரணாக நின்றனர்.
சுமார் 650 கி.மீ.தொலைவுக்கு சுமார் 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற இப்போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்கள், இடதுசாரி கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.