இலங்கை அதிபருக்கு மனநிலை பரிசோதனை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பான மருத்துவ பரிசோதனையை நடத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதிக்குப் பின்னர், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவரது பேச்சுக்கள் என்பன, அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

இந்தநிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி, அவர் தெளிவான மனநிலையில் தான் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் றிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை, விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை என்று, தள்ளுபடி செய்து உத்தவிட்ட நீதிமன்றம், ஒரு இலட்சம் ரூபாவை வழக்குச் செலவாக வழங்க வேண்டும் என்றும் மனுதாரரை பணித்துள்ளது,

 

More News >>