அரசியலே வெறுப்பாக இருக்கிறது.... வெற்றிவேலால் விரக்தியில் ஒதுங்கிய கலைராஜன்

அதிமுகவில் ஒருகாலத்தில் பவர்ஃபுல்லாக உலா வந்த வி.பி.கலைராஜன், அமமுகவில் தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். அங்கு நடக்கும் களேபரங்களால் அரசியலே வெறுத்துப் போய் ஒதுங்கியிருக்கிறாராம். 'என்னால் வட்ட செயலாளராக வந்தவன் எல்லாம் இந்தக் கட்சியில மாவட்ட செயலாளரா இருக்கான்' என அமமுக பற்றி ஓப்பன் கமெண்ட் அடித்திருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் இருப்பதால், தகுதிநீக்க எம்எல்ஏக்கள் உள்பட அமமுக பொறுப்பாளர்கள் பலரும் குமுறலில் உள்ளனர். தினகரன் நடத்தும் கூட்டங்களுக்குச் செலவு செய்தே அவர்கள் ஓய்ந்துவிட்டனர்.

இருந்தாலும் என்றாவது ஒருநாள் அதிகாரம் நமக்கு வந்து சேரும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் வி.பி.கலைராஜனும் ஒருவர்.

சசிகலா தயவில் கட்சிக்குள் வந்தாலும் ஒருநாளாவது மந்திரியாவோம் என்பது அவருடைய முந்தைய கனவுகளில் ஒன்று. ' ஒருநாள் மினிஸ்டர் ஆக இருந்தாலும் முன்னாள் அமைச்சர் என்றுதான் சொல்வார்கள். ஆனால் கொடுக்க மறுக்கிறார்கள்' என தன்னை சந்திக்க வந்தவர்களிடம் எல்லாம் வேதனைப்பட்டார். அமமுகவிலும் அவர் ஆக்டிவ்வாக இல்லை.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஆத்திரம் தெறிக்கப் பேசினார் கலைராஜன். ஒருகட்டத்தில், பன்னீர்செல்வம் கையை வெட்டுவேன் என்றார்.

இதற்கு விளக்கம் கொடுத்த கலைராஜன், அதிமுக தலைமை அலுவலகத்தையும், போயஸ் கார்டனையும் கைப்பற்ற வந்தால், அடித்து விரட்டுவோம் என்றும், அவர்கள் தாக்கினால் நாங்களும் தாக்குவோம். அப்போது கை போனால் என்ன, கால் போனால் என்ன என்று தான் நான் பேசினேன். இது பொதுவான வார்த்தை தான்.

முதல்வர் என்பதால் அவரை பற்றி நான் கூறிய வார்த்தைகள் தவறாக இருந்தால் அதை நான் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்' என்றார்.

இப்போது அமமுகவில் இருந்தாலும் கட்சி செயல்பாடுகளில் அவர் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

புத்தகம் வாசிப்பது, பழைய பாடல்களைக் கேட்பது என ஒதுங்கிவிட்டாராம். இதற்குக் காரணம், வெற்றிவேலின் தன்னிச்சையான ஆட்டம்தானாம். தென்சென்னை அதிமுக மா.செவாக இருந்தபோது, அவரால் வட்டச் செயலாளராகக் கொண்டு வரப்பட்டவர் சரவணன் என்பவர்.

இவர் இப்போது தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார். செந்தமிழனைத் தூக்கிவிட்டு இவரை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ' என்னால் வட்ட செயலாளர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவர் சரவணன். இப்போது அவரும் நானும் ஒரே பொறுப்பில் இருக்கிறோம். என்ன காலக்கொடுமை இது?' என வெறுத்துப் போய் பேசியிருக்கிறார் கலைராஜன்.

வெற்றிவேல் ஆட்டம் நீடிக்கும் வரையில் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் கலைராஜன்.

More News >>