பாலகிருஷ்ணா ரெட்டி பதவியை பறித்தது தர்ம யுத்த கோஷ்டி கே.பி. முனுசாமி? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

ஒரேநாளில் அதிகாரத்தில் இருந்து அதல பாதாளத்துக்கு இறக்கப்பட்டுவிட்டார் முன்னாள் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. கல்வீச்சு தாக்குதல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்ததை அடுத்து, தனது பதவியை அவர் இழந்துவிட்டார். இது திட்டமிட்ட சதி எனப் புலம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி, கடந்த 1998-ம் ஆண்டு ஜி.மங்கலம் சர்ஜாபுரம் சந்திப்பில் கோவிந்தரெட்டி என்பவர் தலைமையில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பாகலூர், ஜி.மங்கலம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் போலீசாரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இந்தநிலையில் போராட்டம் கலவரமாக மாறியது. பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரை கல், கம்பு, இரும்பு கம்பிகளால் போராட்டக்காரர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் எனப் பலர் காயம் அடைந்தனர்.போலீஸ் ஜீப் ஒன்றும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அரசு பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் என மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்தக் கலவரத்தின் கோவிந்தரெட்டி உள்பட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த போராட்டத்தில் பாலகிருஷ்ணா ரெட்டியும் கலந்து கொண்டார். இத்தனைக்கும் வழக்கில் அவர் 72-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 147 (சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்), 341 (சட்டவிரோதமாக தடுத்தல்), பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவு ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஒசூர் கோர்ட்டில் நடந்து வந்த இந்த விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் விசாரணையின்போதே 27 பேர் இறந்துவிட்டனர். இந்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதத்துக்கும் ஆளாகியிருக்கிறார் பாலகிருஷ்ணா ரெட்டி.

இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். அவரது இலாகாவை செங்கோட்டையனிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வால் மன உளைச்சலில் இருக்கிறார்கள் பாலகிருஷ்ணா ரெட்டி ஆதரவாளர்கள். ' கல்வீச்சு சம்பவத்துக்கும் அண்ணனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கோவிந்த ரெட்டி மீது வழக்கு போட்டபோது அண்ணன் பெயரையும் சேர்த்துவிட்டார்கள். அவருக்குத் தொடர்பில்லாத சம்பவம் இது. 3 ஆண்டு தண்டனை கொடுக்கப்பட்டதில் ஏதேனும் சதிப் பின்னல் இருக்குமோ என அவர் சந்தேகப்படுகிறார். தொடக்க காலங்களில் கே.பி.முனுசாமி பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களாக தம்பிதுரை ஆதரவாளராக இருந்து வருகிறார். பதவி பறிபோனதற்கு என்ன காரணமாக இருக்கும் என விசாரணை செய்து வருகிறார். உண்மையில் இந்தத் தண்டனையை அவர் எதிர்பார்க்கவில்லை' என்கின்றனர்.

More News >>