பழனியப்பன், ஜெயந்தி, மாரியப்பன் கென்னடிக்கு தூண்டில்... தினகரனுக்கு ஹெவி நோஸ் கட் கொடுக்க ஸ்டாலின் கட்டளை

திமுக தலைவர் ஸ்டாலின்-அமமுக தினகரன் ஆகியோர் இடையிலான மோதல், வீதிக்கு வந்திருக்கிறது. தினகரன் கட்சியில் இருந்து மேலும் சில செங்கல்களை உருவுங்கள் என உடன்பிறப்புகளுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.

திருவாரூா் இடைத்தோ்தலைக் கண்டு தி.மு.க அஞ்சுவதாக அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், டிடிவி தினகரன் மீது தான் சிபிஐ வழக்கு, ஃபெரா வழக்கு, சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளால் அவா்தான் அச்சப்பட வேண்டும். நோ்த்திக்கடன் போன்று வாராவாரம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வருகிறார். ஆா்.கே.நகா் தொகுதியில் அவா் எப்படி வெற்றி பெற்றார் என்று அனைவருக்கும் தெரியும். தற்போதும் கூட அவரை ஆா்.கே.நகா் மக்கள் 20 ரூபாய் தினகரன் என்று தான் அழைக்கின்றனா். அப்படிப்பட்ட நபா் தி.மு.க.வை அச்சப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது' எனக் கூறியிருந்தார்.

இதன் அடுத்தகட்டமாக முரசொலியிலும் தினகரனை விமர்சித்து கட்டுரை தீட்டப்பட்டிருந்தது.

முரசொலி வார்த்தைகளால் ஆத்திரமான டிடிவி, ' கட்சியை, மக்களைக் காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத்தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி! லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும். லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது.

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி. என வேஷமிடும் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..?' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

2ஜி வழக்கு என்றெல்லாம் தினகரன் வார்த்தைகளை வெளியிட்டதில் கடும் கோபத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

'செந்தில் பாலாஜியைப் போல பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், சோளிங்கர் பார்த்திபன் உள்ளிட்ட அமமுக பொறுப்பாளர்களை வளைக்கும் வேலைகளைத் தொடங்குங்கள். சீட் அல்லது கட்சிப் பதவி கொடுக்கப்படும் எனச் சொல்லுங்கள். அந்தக் கட்சியில் தினகரனைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது. நம்பக்கம் வருவதற்கு என்ன கேட்டாலும் கொடுங்கள்' என பசையான மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் ஸ்டாலின். இனி அடுத்து வரக் கூடிய நாட்களில், இணைப்பு விழாக்களை தொடர்ந்து நடத்தப் போகிறாராம் ஸ்டாலின்.

- அருள் திலீபன்

More News >>