சர்ச்சை புத்தகம் எதிரொலி:மருத்துவ பரிசோதனையில் டிரம்ப் பாஸ்

வாஷிங்டன்: அதிபராக பணியாற்றுவதற்கு டிரம்ப் போதிய மனநிலையில் இல்லை என வெளியான சர்ச்சை புத்தகத்தின் எதிரொலியாக டிரம்பிற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் மைக்கேல் வோல்ப் என்பவர் எழுதிய ‘பயர் அண்ட் ப்யூனி இன்சைட் தி டிரம்ப் வொயிட் ஹவுஸ்’ என்ற புத்தகத்தில், டிரம்பின் மனநிலை குறித்து பல கேள்விகளை ஆசிரியர் எழுப்பி இருந்தார்.

அதில், அதிபராக தொடர்வதற்கு தேவையான மனநிலையை அவர் கொண்டுள்ளாரா என்றும் கேட்டு இருந்தார். மேலும், கூறியதையே திரும்பத் திரும்பக் கூறுவது குறுகிய கால நினைவாற்றல் உள்ளிட்ட காரணங்களால் டிரம்ப் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வோல்ப் குறிப்பிடுகையில், “முன்பெல்லம் கூறியதையே, வார்த்தை மாறாமல் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் கூறிவந்த டிரம்ப், தற்போது அதை 10 நிமிடங்களுக்குள் செய்கிறார்” என்றார்.

இந்நிலையில், அதிபராக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக டிரம்புக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவராக இருக்கும் ரோனி ஜாக்சன் பரிசோதனை அறிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், “எல்லா சோதனையிலும் டிரம்ப் தகுதி பெற்றுள்ளதாக கூறிய அவர், 4 முதல் 7 கிலோ வரையில் உடல் எடையை மட்டும் டிரம்ப் குறைக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.

More News >>