கொலம்பியாவில் பாலம் இடிந்து விழுந்து 9 பேர் பரிதாப பலி

பகோட்டா: கொலம்பியாவில் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால், கட்டுமான தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலம்பியா, கண்டிநமார்கா, மேதா மாகாண எல்லைகளுக்கு இடையே சிரஜாரா என்ற இடம் உள்ளது. இங்கு, சுமார் 450 மீட்டர் நீளம் கொண்ட ஒரு பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பாலம் அந்த நாட்டின் தலைநகர் பகோட்டாவையும், வில்லாவிசென்சியோ நகரையும் இணைக்கிற நெடுஞ்சாலையின் ஒரு அங்கமாகும்.

இந்தப் பாலத்தின் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 கட்டுமான தொழிலாளர்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. மேலும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் ஜெர்மன் கர்டோனா பார்வையிட்டு, “விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தும்படி” உத்தரவிட்டுள்ளார்.

More News >>