மாயாவதி பிரதமராக ஆதரவா... ? அகிலேஷ் யாதவ் சூசக தகவல் !
இதுவரை பெரும்பான்மை பிரதமர்கள் உ.பி.யிலிருந்தே தேர்வாகியுள்ளனர். இந்தத் தடவையும் உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் பிரதமராக வருவார் என மாயாவதி முன்னிலையில் அகிலேஷ் யாதவ் கூறியது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
உ.பி.யில் வரும் மக்களவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணியாக போட்டியிட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாயாவதி மம், அகிலேஷ் யாதவும் லக்னோவில் இன்று வெளியிட்டனர். மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் சரிசமமாக தலா 38 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்தனர்.
கூட்டணி கட்சிக்கு 2 இடமும், சோனியா, ராகுல் ஆகியோர் போட்டியிடும் ரேபரேலி ,அமேதியில் போட்டியிடாமல் விட்டுக் கொடுப்பதாகவும் அறிவித்தனர். இதன் பின் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். பிரிவினையைத் தூண்டும் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த கூட்டணி சேர்ந்து ள்ளோம். மக்களவைத் தேர்தலுக்குப் பின்பும் கூட்டணி தொடரும் என்றனர். பின்னர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், மாயாவதியை என்றைக்கு கேவலமாகவும்,அவதூறான வார்த்தைகளாலும் பா.ஜ.க விமர்சித்த நாளிலேயே எங்கள் கூட்டணி உருவாகிவிட்டது என்றார். பிரதமர் பதவிக்கு மாயாவதியை ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு, யாரை ஆதரிப்பேன் உங்களுக்கு தெரிந்தது தானே என்று மழுப்பினார்.
கடந்த காலங்களில் உ.பி.யில் இருந்துதான் பிரதமராக பலர் தேர்வாகினர். அதே சூழல் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். உ.பி.யைச் சேர்ந்தவர் தான் பிரதமராக வருவார் என பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார் அகிலேஷ் யாதவ்.