டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் மர்ம மரணம்

புதுடெல்லி: டெல்லி எயம்ஸ் மருத்துவமனை கழிவறையில் திருப்பூரை சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் சரத் பிரபு. இவர், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், சரத் பிரபு இன்று காலை மருத்துவமனையின் கழிவறையில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் சரத்தின் உடலை மீட்டு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரத் பிரபுவின் மரணம் குறித்து திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ்.படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்தார் என்றும் அவர் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டார் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஒரு மாணவர் மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல், சமீபத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரிராஜ் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக கூறி தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>