காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம். எம்.ஜி.ஆர்.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பது தான் இவரது முழுப்பெயர்,  ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.  இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார்.  அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பின்னாலில் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அவரது அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார். ஒரு மாபெரும் தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழையும்,  வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் ஒருசேர அனுபவித்தார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு, சினிமா பிரச்சனை காரணமாக எம்.ஆர்.ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார். 1969 இல் திமுக பொருளாளராக மாறினார். அண்ணாவின் இறப்புக்கு பிறகு திமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக திமுகவில் இருந்து விலகி, 1972 இல் தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார். 1977 இல் முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆட்சி செய்தார். அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். இந்திய நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரனையே சாரும், ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.   எம்.ஜி.ஆரின் பூர்வீகம் மற்றும் வரலாறு...   எம்.ஜி.ஆரின் தந்தை ஓர் வழக்குரைஞர். அவரது இயற்பெயர் மேலக்காடு கோபால மேனன், அவர் கேரளாவின் பாலக்காடு பகுதியில் வடவனூரில் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பிராமண விதவையுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  கேரள சமூகத்தின் மரபுகளை பின்பற்றி, சக மனிதர்கள் அவருக்கு ‘ஸ்மார்தவிசாரம்’ செய்து அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர். இதன் காரணமாகவே அவர் சிலோனுக்குத் தப்பி ஓடினார், சிலோனில் மருதூர் சத்யபாமா என்பவரை திருமணம் செய்தார். அங்கு அவர்களுக்கு ஜனவரி 17, 1917 ஆம் ஆண்டு, எம்.ஜி.ராமச்சந்திரன் மகனாக பிறந்தார்.  எம்.ஜி.ராமச்சந்திரன், தனது குழந்தை பருவத்திலிருந்தே இந்து மதத்தைத் தீவிரமாகவும், உறுதியாகவும் நம்பினார்.  இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தெய்வமாக இருக்கும் முருகக்கடவுளைத் தனது ஆஸ்தான கடவுளாக எண்ணித் தீவிரமாக வழிபாட்டு வந்தார். அவரது ஆட்சி காலத்தில், எதிர்கட்சிகள் அவரை மலையாளி என்றும், தமிழ்நாட்டை தமிழன் அல்லாத ஒரு மலையாளி எப்படி ஆளலாம் என கேள்வி எழுப்பிய வரலாறு உண்டு,  ஆனால் அவர் பிறந்தது இலங்கை என்றும், அவரது சிறு வயதில் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார் என்றும், தமிழ்பள்ளியில் தான் படித்தார் என்றும் வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக பள்ளி படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டது, எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  தனது  பெயரை 'ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். பல மேடை நாடகங்களில் நடித்தார், சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததக ரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டு, 1947ல் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு பிறகு தமிழ் திரையுலகம் இவரை பற்றிக்கொண்டது, தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.  1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. தனது மொத்த சொத்தையும் விற்று இந்த பத்தை தயாரித்தார். "இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன், தோல்வி அடைந்தால் நான் நாடோடி" என அன்று அவர் பேசியது அவரை தமிழகத்துக்கு முடி சூடிய மன்னராக்கியது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும்.  1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது. 1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார்.  ஆனால், அவர் அதை அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழ் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார், சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். மரணம்... எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார். பிறகு, அஇஅதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.
More News >>