பலமணி நேரம் தலைகீழாக நின்றும் பலனில்லை வீட்டுக்குள் நுழைய கடைசியில் திருடன் செய்த காரியம் என்ன தெரியுமா?

Theft attempt in thrithala

by Nishanth, Oct 4, 2020, 11:56 AM IST

5 மணி நேரத்திற்கும் மேல் போராடியும் கேரளாவில் ஒரு திருடனால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. கடைசியில், தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றி கதவை எரித்தும் பலன் இல்லாமல் வெறுங்கையுடன் அந்த திருடன் திரும்பிச் சென்றான்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள திருத்தாலா என்ற இடத்தை சேர்ந்தவர் ஷபீக். துபாயில் 30 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த இவர் சமீபத்தில் ஊர் திரும்பியிருந்தார். திருத்தாலா பகுதியிலேயே இவர் ஒரு கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதியில் திருட்டு பயம் அதிகம் என்பதால் வீட்டை சுற்றிலும் இவர் கண்காணிப்பு கேமரா வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அன்று இரவு அவர் உறவினர் வீட்டிலேயே தங்கினார்.


மறுநாள் மாலையில் வீட்டுக்கு திரும்பிய ஷபீக், வீட்டு கேட் திறக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது முன்பக்க கதவு எரிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து ஜன்னல் கம்பிகளும் வளைக்கப்பட்டிருந்தன. திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்ததை உறுதி செய்த ஷபீக், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது தான் நடந்த சம்பவம் என்ன என்பது குறித்து தெரியவந்தது.
நள்ளிரவு 12 மணியளவில் வீட்டு கேட்டை திறந்து உள்ளே செல்லும் முகமூடி அணிந்த ஒரு திருடன், முன் வாசலை திறக்க முயற்சிக்கிறான். தான் கொண்டுவந்த இரும்பு ஆயுதங்களை பயன்படுத்தி தரையில் அமர்ந்தும், படுத்தும், உருண்டும் பூட்டை உடைக்க நீண்டநேரம் முயற்சி செய்தான். ஆனால் அது பலமான கதவு என்பதால் அவனால் திறக்க முடியவில்லை. தன்னுடைய கையிலிருந்த அனைத்து இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்தியும் அந்த கதவை திறக்கவோ, பூட்டை உடைக்கவோ முடியவில்லை. என்ன செய்வது என சிறிது நேரம் யோசித்த அந்த திருடன் பின்னர் பக்கத்து வீட்டுக்கு சென்றான்.


அடுத்த வீட்டிலிருந்து மண்வெட்டி, கோடாலி, கடப்பாரை உட்பட சில இரும்பு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் கதவை உடைக்க முயற்சித்தான். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து வீட்டின் முன் பக்கமிருந்த இரண்டு ஜன்னல் கம்பிகளை வளைக்க அவன் முயற்சித்தான். அதிலும் தோல்வியே கிடைத்தது. பின்னர் வீட்டுக்கு பின்புறம் சென்று பின்புற வாசல் வழியாக உள்ளே நுழையலாம் என்ற பார்த்தபோது அங்கு இரும்பு கிரில் போடப்பட்டிருந்தது. அதன் கம்பிகளை வளைக்க முயற்சித்தும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


நேரம் செல்லச் செல்ல அந்தத் திருடனுக்கு பதற்றம் அதிகரித்தது. விடிவதற்குள் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு போகலாம் என பார்த்தால் தலைகீழாக நின்று பார்த்தும் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த திருடன், தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை ஊற்றி கதவை எரிக்க திட்டமிட்டான். அங்கு கிடந்த துணி மற்றும் மிதியடியை போட்டு மண்ணெண்ணை ஊற்றி கதவை எரித்தான். ஆனால் கதவு எளிதில் தீ பிடிக்கவில்லை. இப்படியாக அதிகாலை 5 மணி ஆகிவிட்டது. இதற்கு மேலும் அங்கு இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அந்த திருடன் உடனடியாக அந்த இடத்தை காலி செய்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றான். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து திருத்தாலா போலீசில் ஷபீக் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஏமாந்த திருடனை தேடி வருகின்றனர்.

You'r reading பலமணி நேரம் தலைகீழாக நின்றும் பலனில்லை வீட்டுக்குள் நுழைய கடைசியில் திருடன் செய்த காரியம் என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Crime News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை