தொல்லை தரும் பிள்ளைகள்: என்ன செய்யலாம்?

Parenthood: Why parents need to practice self-regulation, not self-control

by SAM ASIR, Jun 24, 2019, 10:22 AM IST

வேலைக்குச் சென்று களைத்துப் போய் 'கொஞ்சம் தலையை சாய்க்கலாமா?' என்று திரும்பி வரும்போது, வீடு முழுவதும் அலங்கோலமாக கிடந்தால் எப்படி இருக்கும்?
பணிக்குச் செல்லும் தாய்மாரின் நிலை அப்படித்தான் இருக்கிறது. என்னதான் சொன்னாலும் பிள்ளைகளுக்குப் பொறுப்பே வருவதில்லை என்றுதான் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர்.

சிறிது சத்தத்தை உயர்த்தினாலும், 'இவள் எப்போதும் இப்படியேதான்' என்று பட்டம் வேறு. அப்படியே அடக்கி அடக்கி வைத்தாலும் என்றாவது ஒருநாள் வெடித்துவிடுகிறது. அன்று யாரிடம் கோபப்படுகிறோம் என்றே தெரியாமல் கொட்டித் தீர்க்கக்கூடிய நிலை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வுதான் என்ன?

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இதற்குத் தீர்வை எட்டலாம். உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது என்றால் என்ன?
வெளிப்படுத்துங்கள்

"இப்படி பொம்மையை எல்லாம் ஹாலில் வீசி எறிந்தால் நான் என்னதான் செய்றது?" என்று உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள். ஆனால், பிள்ளையின் முன்பு அல்ல! உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தலாம். உள்ளுக்குள்ளேயே வைத்து குமைவது ஆரோக்கியமானதல்ல. கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும். யாருமே இல்லையென்றால், யாரிடமும் வெளிக்காட்ட விரும்பாவிட்டால் குளியலறையில் கதவைப் பூட்டிக்கொண்டு சத்தமாக சொல்லிக்கொள்ளலாம். உணர்ச்சி வடிந்துவிடும்.

பெயரிடுங்கள்

இப்பொழுது புயலுக்குக்கூட பெயர் வைக்கிறார்கள். ஒரு காரியத்தை முழுவதுமாக புரிந்துகொள்வதற்கு அதை முக்கியத்துவப்படுத்தும் விதமாக பெயர் வைப்பது அறிவியல் சார்ந்த நடைமுறையாகும். உங்கள் உணர்ச்சிகளுக்குப் பெயர் வைப்பது மனதை அமைதிப்படுத்தும். "நான் ஏமாற்றமாக உணர்கிறேன்" "நான் கோபமாக இருக்கிறேன்" "நான் வெறுத்துப்போயிருக்கிறேன்" என்று உங்கள் உணர்ச்சி நிலைகளுக்குப் பெயரிட்டுப் பாருங்கள். உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளை வெளிக்காட்டாதிருக்க இது உதவும்.

நிதானியுங்கள்:

பதற்றப்பட்டு எதையாவது சொல்லிவிட்டு பின்னர் வருந்துவதைக் காட்டிலும் அமைதியாக இருப்பது நலம். வார்த்தைகள் வெளியே வருவதற்கு முட்டி மோதும்போது, "நான் கொஞ்சம் ஆழ்ந்து மூச்சு இழுத்து விடுகிறேன்." "சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு முன்பு ஒரு காஃபி குடித்துவிடுகிறேன்." "கொஞ்சம் வெளியே நடந்துவிட்டு வருகிறேன்" என்று நிதானிக்கலாம். சூட்டோடு சூடாக எதையும் பேசாதிருப்பது மிகவும் நல்லது.

நேசியுங்கள்:

உங்களையே நீங்கள் நேசியுங்கள். பேசத்துடிக்கும் நாவை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்துவதை விட, "நீ ஒரு நல்ல தாய்" "பிள்ளைமேல் உனக்கு எவ்வளவு அக்கறை" என்று உங்களை நீங்களே மெச்சிக்கொள்ளலாம். இது நாம் செய்வது நல்லதுதான் என்ற உறுதியை தரும்.

மாற்றுங்கள்:

பிள்ளையை பற்றிய உங்கள் பார்வையை மாற்றுங்கள். பிள்ளைகளை சமாளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள்பேரில் கரிசனை காட்டுவதைப் போன்று, "அவன் வேண்டும் என்றே செய்யவில்லை. சின்னபிள்ளை" "அவள் எனக்குத் தொல்லை தரவேண்டும் என்று இதை செய்யவில்லை. கொஞ்சம் பொறுமையாக சொன்னால் திருந்திவிடுவாள்" என்று உங்களுக்குள் சொல்லி கொள்ளுங்கள். பிடிவாதம் பிடிக்கிறான்; எதிர்த்துப் பேசுகிறாள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, பார்வையின் கோணத்தை கொஞ்சம் மாற்றுங்கள்.

மேலே சொன்னவற்றால் பலன் கிடைக்க காலதாமதம் ஆகலாம். இது ஒரு நீண்ட செயல்முறைதான். கொஞ்சம் பொறுமையாக செய்து பாருங்கள். வெற்றி உங்களுக்குத்தான்!

காலை கடனை கழிப்பதில் கஷ்டமா? இப்படி செய்யுங்க

You'r reading தொல்லை தரும் பிள்ளைகள்: என்ன செய்யலாம்? Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை