கர்நாடகாவில் பாஜக ஆட்சி முதல்வரானார் எடியூரப்பா

BJPs Yediyurappa takes charge as Karnataka CM, faces challenge of numbers

by எஸ். எம். கணபதி, Jul 26, 2019, 22:43 PM IST

கர்நாடகாவில் பாஜக தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக 4வது முறையாக பதவியேற்றார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. 14 மாதங்களை கடந்த அந்த கூட்டணி அரசுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டது. காங்கிரசில் இருந்து 13 எம்எல்ஏக்கள், 3 எம்எல்ஏக்கள் என்று 16 பேரின் ராஜினாமாவால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான குமாரசாமி, கடந்த வாரம் சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நான்கு நாட்களாக ஜவ்வாக இழுத்த விவாதத்தின் முடிவில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வாக்கெடுப்பு எம்எல்ஏக்களும், எதிராக 105 பேரும் வாக்களித்ததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இந்நிலையில், கூடுதல் எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும். எடியூரப்பா முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக மேலிட மோ இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டதால், கடந்த 2 நாட்களாக கர்நாடக அரசியலில் கடும் அமைதி நிலவியது. ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்களில் 3 பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்ய மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் கர்நாடக பாஜக மூத்த நிர்வாகிகள் கொண்ட ஒரு குழுவினர் நேற்று டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்தனர். நேற்று இரவு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும், கர்நாடக பாஜக தலைவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று(ஜூலை26) காலையில் அமித்ஷா, எடியூரப்பாவை தொடர்பு கொண்டு சிக்னல் கொடுத்தார். இதையடுத்து, மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை, பாஜக தலைவர் எடியூரப்பா நேரில் சந்தித்தார். பாஜக எம்எல்ஏக்கள் 105 பேரின் ஆதரவுப் பட்டியலைக் கொடுத்து ஆட்சியமைக்க எடியூப்பா உரிமை கோரினார். இதையடுத்து எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், ஒரு வாரத்திற்குள் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று மாலை 6.30 மணிக்கு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் எடியூரப்பா பதவியேற்றார். . கவர்னர் வஜூபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. எடியூரப்பா வரும் 29ம் தேதியன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருக்கிறார். அதில் தனது பெரும்பான்மையை நிரூபித்த பின்பு, புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றுள்ளார். கடந்த 2007-ல் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற போது, மெஜாரிட் டியை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். 2008-ல் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று 2-வது முறையாக எடியூப்பா முதல்வரானார். 3 வருடங்கள் முதல்வராக இருந்த நிலையில், ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால் பதவி விலகினார். பின்னர், கடந்தாண்டு இதே 105 எம்எல்ஏக்கள் பலத்தைக் காட்டி, 3-வது முறையாக முதல்வரான எடியூரப்பா, மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல், பதவியேற்ற இரண்டரை நாட்களில் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், மொத்தம் 224 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், 105 பாஜக எம்எல்ஏக்கள் பலத்துடன் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் காங்கிரஸ் - மஜத கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் ராஜினாமாவால் பாஜகவுக்கு சற்று தெம்பு கிடைத்துள்ளது. சபாநாயகர், இந்த 15 பேரின் ராஜினாமாவை ஏற்றாலோ அல்லது தகுதி நீக்கம் செய்தாலோ சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பலம் குறைந்து பாஜக மெஜாரிட்டி பெற்று விடும். என்றாலும் அடுத்து வரும் இடைத்தேர்தலில் பெறும் வெற்றியைப் பொறுத்தே பாஜக ஆட்சி நிலையான ஆட்சியாக அமையும்.

You'r reading கர்நாடகாவில் பாஜக ஆட்சி முதல்வரானார் எடியூரப்பா Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை