பெட்ரோல் விலை குறைப்பு.. கொரோனா நிவாரணம் ரூ.4000.. திமுக தேர்தல்அறிக்கை முழுவிவரம்..

by எஸ். எம். கணபதி, Mar 13, 2021, 18:28 PM IST

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் ரூ.4ஆயிரம், அரசு பணியில் 75 சதவீதம் தமிழர்களுக்கு என சட்டம், பள்ளி மாணவர்களுக்கு பால் என்று பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

திமுக தலைமை அலுவலகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முக்கிய அம்சங்கள் வருமாறு :
திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும். சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது. கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அரிசி கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4 ஆயிரம் வழங்கப்படும்.

ஜூன் 3ம் தேதி முதல் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் முதல் ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும். ஜூன் 3ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும். பயணிகள் பேருந்துகள் அனைத்திலும் ஜிபிஎஸ் வசதி அமைக்கப்படும்.

பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். புதிய ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வழங்கப்படும். நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
அனைத்து அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் ஆக்கப்படும். சட்டம் ஒழுங்கை காக்கும் பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் கொண்டு வரப்படும். நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும். சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும். கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

முக்கியமான மலைக்கோவில்கள் அனைத்திலும் கேபிள் கார் வசதி ஏற்படுத்தி தரப்படும். கிராமப்புற பூசாரிகளின் ஊதியமும், ஓய்வூதியமும் அதிகரிக்கப்படும். இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும். 32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும்.
ஏழை மக்கள் பசி தீர முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணகவகம் அமைக்கப்படும். நடைபாதை வாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்.

கலைஞர் காப்பீட்டு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும். தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும். இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.

கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், அரசு அலுவர்கள், முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். பணிக்காலத்தில் இறக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி, 3 லட்சம் என்பது 5 லட்சம் ஆக்கப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.

பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும். பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும். சிறுகுறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்!

மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரமாக உயர்த்தப்படும். மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக இருக்கும் நீட் தேர்சை ரத்து செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரி இடங்கள் அமைத்தும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும். ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலை வாய்ப்புகள் தமிழர்க்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும். அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 80 வயதுக்கு மேல் 20 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. அதனை 70 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும், 80 வயதுக்கு மேல் 10 சதவிகிதமாகவும் வழங்குவோம்! வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும். அரசுப் பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும். சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடி தேடி மருத்துவ வசதி வரும்.

கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கைம் பெண்களில் 35க்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத, ஆதரவற்ற மகளிருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும். புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.

அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வைபை வசதி செய்து தரப்படும். அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.

நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ 4000 ஆக உயர்த்தி வழங்கப்படும். உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டப்பட்டு, அது அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படும். நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும். நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.

ஏழை எளிய சிறு வணிகர்களுக்கு 15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர் செய்ய பொருளாதார உயர் மட்டக்குழு அமைக்கப்படும். மீனவர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அனைவருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும். சென்னை நகரை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து பாதுகாக்க சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும். வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண் பொருள்களை உரியவிலையில் விவசாயிகள் விற்பனை செய்ய வேளாண் பொருள்கள் விலை நிலவரம் தெரிவிக்கும் அமைப்பு உருவாக்கப்படும். அதாவது மார்க்கெட்டிங் ஏஜென்சி அமைக்கப்படும். வாழை,மஞ்சள்,மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும். இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

தமிழ் எழுத்து வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலகநாடுகளை மத்திய அரசு வலிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும். அதிமுக அரசால் சிதைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். அரசு பள்ளி, கல்லூரி மாணவியர்க்கு இலவச நாப்கின் வழங்கப்படும். பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு 25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

நரிக்குறவர், குருவிக்காரர், வேட்ட்டைக்காரர், லம்பாடி, படுகர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கபப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்க்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும். வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும். புகழ்பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும். பக்கிம்காம் கால்வாய் சீரமைக்கப்படும். சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும். தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம். திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும். வேலூர், கரூர், ஓசூர், ராமநாதபுரத்தில் புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்தாக பால் வழங்கப்படும். சிறுகுறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும். 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சகம் அமைக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You'r reading பெட்ரோல் விலை குறைப்பு.. கொரோனா நிவாரணம் ரூ.4000.. திமுக தேர்தல்அறிக்கை முழுவிவரம்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை