திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.. கணிப்புகளில் தகவல்.. 3வது இடம் டிடிவி கட்சி..

by எஸ். எம். கணபதி, Mar 22, 2021, 19:42 PM IST

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 150 இடங்களுக்கு குறையாமல் பெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முதல் முறையாக 5 அணிகள் களத்தில் கடுமையாக மோதுகின்றன. திமுக அணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, வி.சி.க, ம.ம.க., கொ.ம.தே.க மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, ஓவைசி கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கமலின் மக்கள்நீதிமய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.க உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த 4 கூட்டணிகள் தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.

ஐந்து அணிகள் களம் கண்டாலும் திமுக, அதிமுக அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 3ம் இடத்தை பிடிப்பதில்தான் டிடிவி மற்றும் கமலுக்கு இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறது. திமுக 173 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் 15 தொகுதிகளில் உதயசூரியனிலுமாக 188 இடங்களில் உதயசூரியன் களத்தில் உள்ளது. திமுகவும், அதிமுகவும் 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. 188ல் இந்த 130 தொகுதிகளைத் தவிர மற்ற 55 இடங்களில் திமுகவுக்கு பலம் அதிகமாக உள்ளதால் அவற்றில் பெரும்பாலானவற்றை திமுக கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

தற்போதைய சூழலில் அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி மீதும், மத்திய பாஜக ஆட்சியின் மீதும் மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு, கொரோனாவால் வேலையிழப்பு, தொழில்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தலையாயப் பிரச்னைகளாக உள்ளன. இது தவிர பொள்ளாச்சி பாலியன் வன்கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை மகன் அடித்து கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அந்தந்தப் பகுதியில் ஆளும் அதிமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளது.

தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த முதல்வர் ரேஸில் மு.க.ஸ்டாலின் உள்ளார். வெற்றி வாய்ப்பிலும் திமுக முதலிடத்தில் இருந்தது. அடுத்து வந்த ஆங்கில சேனலான டைம்ஸ் நவ் கருத்து கணிப்பிலும் திமுக கூட்டணி 160 முதல் 169 தொகுதிகளை கைப்பற்றும், அதிமுக அணி 50 முதல் 60 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டது. பிரபல பத்திரிகையாளர் இந்து என்.ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தமிழ்நாட்டில் திமுக அணிக்கு சாதகமான அலை வீசுவதாகவும், அதிமுக கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பொறுப்பில் விடப்பட்ட மற்ற தொகுதிகள் எதற்கும் செல்லாமல், தங்களின் தொகுதிக்குள்ளேயே முடங்கி விட்டதாகவும், தோல்வி பயத்தால் முழு வீச்சில் பிரச்சாரம் செய்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதிமுக-பாஜக அணி மீதான அதிருப்தி அலை வீசுவது ஒருபுறம். இன்னொரு புறம், டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததால் அந்த கூட்டணிக்கு ஏற்பட்ட எழுச்சியும் அதிமுக அணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் பல தொகுதிகளில் அமமுக-தேமுதிக கூட்டணி குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை வாக்குகள் பெறலாம். இதில் 90 சதவீதம் அதிமுகவின் வாக்குகள் என்பதும், அதனால் அதிமுகவுக்கு விழ வேண்டிய வாக்குகள் தடுக்கப்படுகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த சூழ்நிலையில், கொங்கு மண்டலத்திலும், வடமாவட்டங்களிலுமாக அதிமுக கூட்டணி 60 முதல் 70 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

You'r reading திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.. கணிப்புகளில் தகவல்.. 3வது இடம் டிடிவி கட்சி.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை