மே1, மே2 தேதிகளில் ஊரடங்கா? – நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்னது என்ன?

by Madhavan, Apr 29, 2021, 15:25 PM IST

வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா இரண்டாவது பரவல் தீவிரமாகி வருவதை அடுத்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவர், தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவி வருவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் ஆணையமும், அரசும் ஆலோசித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், கொரோனா பரவலை தடுக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து பத்திரிகைகளில் விரிவான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வாக்கு எண்ணிக்கைக்கு பின் அரசியல் கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க, 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும் அல்லது இரு தவணை தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 2 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலில் உள்ளதாகவும், முந்தைய நாளான மே 1ம் தேதியைப் பொறுத்தவரை, அன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படாது... அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், மே 1ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் துவங்க உள்ளதால் அதை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதை ஏற்று வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூட வேண்டாம் எனவும், கொண்டாட்டங்களிலும், ஊர்வலங்களிலும் ஈடுபட வேண்டாம் என அரசியல் கட்சியினரை கேட்டுக் கொண்டனர்.

மே 1ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது குறித்து யோசனை தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர். மேலும், ரெம்டெசிவிர், படுக்கை, வெண்டிலேட்டர், ஆக்சிஜன் இருப்பு குறித்தும், மாநில எல்லையில் தடுப்புகள் அமைப்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

You'r reading மே1, மே2 தேதிகளில் ஊரடங்கா? – நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்னது என்ன? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை