முதலமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய நபர் கைது!
முதலமைச்சர் பற்றிய முகநூல் பக்கத்தில் அவதூறு தகவல்!
தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் அரசியல் தலைவர்கள் பற்றியும் தமிழக காவல்துறை பற்றியும் சங்கர் தமிழன் என்ற முகநூல் பக்கத்தில் இழிவான, ஆபாசமான அவதூறு தகவல்கள் அடிக்கடி வெளியிட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அண்ணாநகரில் வசிக்கும் முருகையா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், “தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் பற்றியும், தமிழக காவல்துறை பற்றியும் சங்கர் தமிழன் என்ற முகநூல் பக்கத்தில் இழிவான, ஆபாசமான அவதூறு தகவல்கள் அடிக்கடி வெளிவருகிறது.
வீடியோ படமாகவும் மற்ற முகநூல் பயன்படுத்வோர்க்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். சங்கர் தமிழன் என்ற பெயரில் முகநூல் பக்கம் வைத்திருப்பவர் பெயர் சங்கரலிங்கம் (வயது 35) என்றும், இவர் குவைத்தில் வேலை பார்க்கிறார் என்பதும் தெரிய வந்தது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் கிராமம் சங்கரலிங்கத்திற்கு சொந்த ஊராகும். சைபர் கிரைம் போலீசார் எடுத்த நடவடிக்கை காரணமாக வாலிபர் சங்கரலிங்கம், குவைத்திலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார்.
அவரை சைபர் கிரைம் போலீசார் அங்கு கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
You'r reading முதலமைச்சர் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய நபர் கைது! Originally posted on The Subeditor Tamil
More Politics News