இலங்கையின் சட்டப்பிடியில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: டிடிவி தினகரன்
TTVDinakaran assertion rescue Tamil fishermen who are trapped Sri Lanka law
இலங்கையின் கொடூர சட்டப்பிடியின் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 8 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி திரேஷ்புரம், மாப்பிள்ளையூரணி, சுனாமிநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் இந்த கொடூர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் 26 லட்சம் அபராத தொகை அல்லது 3 மாதம் சிறை என தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
மீனவ சமுதாய மக்களின் வாழ்வில் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய மத்திய - மாநில அரசுகள், தங்கள் கடமையில் இருந்து முற்றிலும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த சட்டம் இலங்கையால் அமல்படுத்தப்பட்டபோதே இது முழுக்க முழுக்க தமிழக மீனவர்களை குறிவைக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தோம். ஆனால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசோ இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இது பெரும் பாதகத்தை தற்போது தமிழக மீனவர்கள் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது.
மீனவர்கள் பிரச்சினையில் இந்த மெத்தனப் போக்கை பழனிசாமியின் அரசு தொடர்ந்து கடைப்பிடிக்குமேயானால், அது மீனவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.
தங்கள் சுயநலனிற்காக மட்டுமே மத்திய அரசோடு நட்புறவுகொள்ளும் இந்த துரோக ஆட்சியாளர்கள், தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 8 மீனவர்களையும், மத்திய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கை அரசின் இக்கொடூர சட்ட பிடியில் இருந்து அவர்களை காப்பாற்றிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
You'r reading இலங்கையின் சட்டப்பிடியில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: டிடிவி தினகரன் Originally posted on The Subeditor Tamil
More Politics News