திமுக முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி காலமானார் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

DMK ex MP Vasanthi Stanley passed away

by Mari S, Apr 28, 2019, 09:21 AM IST

திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி (56) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வசந்தி ஸ்டான்லி, 2008 முதல் 2014 வரை திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்தவர்.

மறைந்த திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி இல்லத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

"முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் சிறுபான்மை அணித் தலைவருமான திருமதி வசந்தி ஸ்டான்லி அவர்களின் திடீர் மறைவு என்ற துயரச் செய்தி என்னை பெரும் துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை கழகத்தின் குரலாக மாநிலங்களவையில் பல்வேறு முக்கிய பிரச்னைகளில் ஒலித்தவர் திருமதி வசந்தி ஸ்டான்லி. கழகம் நடத்திய போராட்டங்களில் தடந்தோள் தட்டி தவறாது முன்னின்றவர். தலைவர் கலைஞர் அவர்களால் ""கழகத்தின் கருவூலம்"" என்று பாராட்டப்பட்டவர்.
வருவாய் துறையிலும், வணிவரி துறையிலும் அரசு ஊழியராக இருந்த அவர் பொது வாழ்விற்கு வந்தவர். கழக மகளிர் அணி துணை செயலாளராகவும் பொறுப்பெடுத்து பணி செய்தவர். கழகத்தின் பேச்சாளராக மட்டுமல்ல தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் கழகத்தின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியிலும், மக்கள் பணியிலும் சிறப்பாகவும், செம்மையாகவும் பணியாற்றியவர்.

""கலைஞர் 87"" என்ற நூல் தொகுப்பினை அவர் வெளியிட்ட போது, அந்த நூலில், ""அப்பா! என் ஆயுள் அடங்கும் கடைசி நொடியில் விழியோரம் ஒரு சொட்டு நீர் உருண்டு வரும். அது உங்கள் பாதத்தை நனைத்தால் நன்றிக் கடனை நான் அடைத்த பாக்கியத்தை அடைவேன் அப்பா!"" என்று உணர்ச்சி பொங்க - ஒரு கழகத் தொண்டருக்கே உரிய பாசத்தில் எழுதி - தலைவர் கலைஞர் அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தவர்.

கழகத்தின் செயல் வீராங்கனையாகத் திகழ்ந்த அவர் இப்போது நம்மிடம் இல்லை. ஆனால் அவரின் உழைப்பு - உண்மைத் தொண்டு - கழகத்திற்காக அவரது கட்டுக்கோப்பான பணி எல்லாம் என்றைக்கும் கழகத்தில் உள்ள கடைக்கோடி தொண்டனுக்குக்கூட நினைவில் நிற்கும். திருமதி வசந்தி ஸ்டான்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகள் - அனைவருக்கும் எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

"வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி. அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு" என கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அரசியலில் மாற்றம்..! தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்..! ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு

You'r reading திமுக முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி காலமானார் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை