காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்

Kanchipuram athi varadhar 48 days festival ends

by Nagaraj, Aug 18, 2019, 10:09 AM IST

காஞ்சிபுரத்தில் 48 நாட்களாக நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் நிறைவு பெற்றது. நேற்று நள்ளிரவில் அனந்த சரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் அத்தி வரதரை வைக்கும் நிகழ்வுடன் வைபவம் நிறைவு பெற்றது. 40 ஆண்டுகள் அனந்த சரஸ் குளத்தில் சயன நிலையில் இருக்கும் அத்தி வரதர் மீண்டும் 2059 -ம் ஆண்டில் தான் காட்சியளிப்பார்.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் அத்தி வரதர் தரிசனம் நடைபெற்று வந்தது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அத்தி வர தர் காட்சியளிக்கும் இந்த வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அத்தி வரதர் சயன கோலத்தில் 31 நாட்களும் நின்ற கோலத்தில் 16 நாட்களும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


46 நாட்கள் நடைபெற்ற இந்த வைபவத்தில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் அத்தி வர தரை தரிசித்தனர். கடைசி சில நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சம் வரை அதிகரித்தது. இதனால் 46 நாட்களில் அத்தி வரதரை தரிசித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பொதுமக்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் தரிசனம் நிறுத்தப்பட்டது.

 

நேற்று, அத்தி வரதரை மீண்டும் அனந்த சரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் சயன் கோலத்தில் வைப்பதற்கான சம்பிரதாயங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டன.
இதனால் நேற்று காலை முதல் பொதுமக்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அத்தி வரதருக்கு காலை, மாலையில் பூஜைகள் செய்யப்பட்டன. அதன் அத்தி வரதருக்கு செய்யப்பட்டு இருந்த அலங்காரங்கள் களையப்பட்டது. தொடர்ந்து,அனந்த சரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் வைக்கப்படும் அத்தி வரதர் சிலைக்கு
அடுத்த 40 ஆண்டுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மூலிகைகள் கலந்த தைலகாப்பு சாத்தப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு மூலவரான வரதராஜப் பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் பின் இரவு 10 மணிக்கு அத்தி வரதரை நீராழி மண்டபத்தில் வைப்பதற்கான சாஸ்திரங்கள் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து கொண்டு சென்று அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் நள்ளிரவு 12.10 மணிக்கு சயன கோலத்தில் வைத்தனர்.
இனி 40 ஆண்டுகள் கழித்து 2059-ம் ஆண்டு தான் அத்தி வரதர் தரிசனம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தி வரதர் விழா நிறைவடைந்தது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சி அத்தி வரதர் வைபவத்தில் பணிபுரிந்த அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துப்புரவு பணியாளர்களுக்கு இன்னும் இரண்டு தினங்கள் பணி நீடிக்கும். போக்குவரத்து மாற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து பணிகளும் முழுமையாக சீரமைக்க 15 நாட்கள் ஆகும்.
இன்று முதல் கோவிலில் வழக்கமான சுவாமி வழிபாடு நடைபெறும். காஞ்சிபுரம் நகர் பகுதியில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இதுவரை 1 கோடியே 7500 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.


அத்திவரதர் தரிசனம் காண கடந்த 48 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், மக்கள் நெரிசலாலும், ஜன நெரிசலாலும் காஞ்சிபுரமே சிக்கித்திணறியது.இந்நிலையில் நேற்று முதல் நெரிசல் இன்றி காஞ்சிபுரம் நகரமே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்றே கூறலாம்.

You'r reading காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார் Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை