எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கை பக்கங்களில் ஒரு சிறு பயணம்.. கேரள வித்து தமிழகத்தின் சொத்து

M.S.V life story

இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்னும் இசைக் கடலில் நீந்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரைப் பற்றி எழுதுவதென்பது கடல் பரப்பிலிருக்கும் மணலை எண்ணுவது போல் தான். ஒரு கட்டுரையிலோ ஒரு வீடியோ தொகுப்பிலோ அல்லது எம்.எஸ்.வியின் பக்கங்கள் என்ற ஒவ்வொரு ஸ்டார் போட்டு பத்து இருபது பெருமைகளை சொல்லி விடுவதாலோ அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை அடக்கி விட முடியாது.

* கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பது போல் அவரை பற்றித் தெரியும் என்று சொல்பவர்களுக்கு அவரைப்பற்றித் தெரிந்ததெல்லாம் கைமண் அளவுதான். தெரியாதது உலகளவு இருக்கும். *எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி ஒருவருக்கு முழுமையாக தெரியும் என்றால் அது எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மட்டும் தான்.

* எம்.எஸ்.விஸ்வநாதன் எப்போதும் எல்லோருக்குமே பொதுவாக ஒரு வார்த்தை சொல்வார், சங்கீதம் தெரியாவிட்டாலும் இங்கிதம் தெரிய வேண்டும் என்பார். அது பலருக்குத் தெரியவில்லை அதனால் தான் உச்சிக்குச் செல்கிறவர்கள் கூட திடீரென்று கீழே விழுந்துவிடுகிறார்கள். ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் என்றைக்குப் புகழின் படியில் காலடி வைக்கத் தொடங்கினாரோ அடுத்தடுத்து உச்சத்துக்குச் சென்றார்.

* ஒரு கட்டத்தில் வர்த்தக ரீதியாக அவரது மார்க்கெட் சரிந்திருக்கலாம் ஆனால் அவர் ஈட்டிய மரியாதைக்கும், அன்புக்கும் மார்கெட் சரிந்ததே இல்லை. அவரது இசைக்குப் பாராட்டு வந்தால் அதற்கு, நான் மட்டும் காரணமில்லை உடன் இசைத்த குழுவினர் தான் காரணம் என்று சக கலைஞர்களுக்கும் பாராட்டைப் பகிர்ந்தளிப்பார்.

* எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ம் ஆண்டு 24ம் தேதி மனயான்காத் சுப்பிரமணியம் மற்றும் நாராயணிக்கு (நானிகுட்சி)க்கு மகனாகக் கேரள மாநிலம் பாலக்காட்டில் எலப்புல்லி கிராமத்தில் பிறந்தார்.

* எம்.எஸ்.வி என்ற இசை வித்தகர் விதையாய் விழுந்தது கேரளா மண்ணில் ஆனால் அது விருட்சமானது தமிழக மண்ணில் என்றால் மிகையாகாது. கேரள வித்து ஆனால் தமிழகத்தின் சொத்து .

*எம்.எஸ்.விஸ்வநாதன் எம் ஜானகியை மணந்தார். இவர்களுக்குக் கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். இவர்களில் யாரும் இசைத் துறைக்கு வராவிட்டாலும் மகன் கோபி கிருஷ்ணா பின்னர் தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

*1940 வருடம் ஜூபிடர் பிக்கர்ஸ் நிறுவனத்தில் எம் எஸ் வி ஆபிஸ் பாயாக வேலை பார்த்தார். அவருக்கு அப்போது மாதம் மூன்று ரூபாய் சம்பளம். காபி, டீ, டிபன் வாங்கிக்கொடுத்து அதிலும் நல்ல பெயர் எடுத்தார்.

*எம்.எஸ்.விக்கு நடிகர் ஆக வேண்டும், பாடகர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் அது நிறைவேறவில்லை. நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். பின்னர் வயதான காலத்தில் கமலுடன் காதலா காதலா, அஜீத்துடன், காதல் மன்னன் நடித்தார்.

* ஆபிஸ் பாயாக இருந்த எம் எஸ்.வி மீது இசை அமைப்பாளர் டி ஆர். பாப்பாவின் கவனம் பட்டது அவர் வி,வெங்கட்ராமன் இசை குழுவில் அவரை சேர்த்துவிட்டார்.
அதன்பிறகு தனக்கு இசை கம்போஸ் செய்வது எளிதாக வருகிறது என்பதை உணர்ந்தார்.
• குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரி தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை தரப் பணம் இல்லாமல் அவருக்குப் பணி விடை செய்து தட்சணையைப் பூர்த்தி செய்தார்.

* எஸ்.எம் சுப்பையாநாயுடு, சி.ஆர்.சுப்பராமன் என்பவரிடம் உதவி இசை அமைப்பாளராகச் சேர்ந்து ஆர்மோனியம் இசைக் கலைஞராக இருந்தார். அங்குதான் இவர் டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா ஆகிய இரண்டு திறமையான வயலினிஸ்ட்களை சந்தித்து நண்பர் ஆனார்.

*எம்.எஸ்,விஸ்வநாதன். டி.கே.ராமூர்த்தி இணைந்து விஸ்வநாதன் ராம்மூர்த்தி என்ற பெயரில் படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினர். 100 படங்களுக்கு மேல் இவர்கள் இணைந்து இசை அமைத்தனர். இந்த இசைக்கூட்டணி 1952 முதல் 1965 வரை நீடித்தது.
* 1963ம் ஆண்டுநடந்த சிறப்பு விழாவில் இவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

*எம் எஸ்.வியின் காலம் 30 வருடங்கள் திரையுலகை ஆக்கிரமித்திருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். 1951-ல் தொடங்கிய இவரது இசை ராஜ்ஜியம் 1981 வரை தொடர்ந்தது.

* சினிமா பாடல்கள் என்றாலே விலகி நிற்கும் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் எம் எஸ்.வியின் இசைக்கு மகுடிக்கு மயங்கிய பாம்புபோல் தலை அசைத்துப் பாடினார்கள்.

* பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோக சந்தர், கே.பாலசந்தர் இயக்குனர்களிடம் அதிக படங்களில் பணியாற்றி இருக்கிறார் எம் எஸ்வி. சிவாஜி நடித்த 'புதிய பறவை' 'எங்கே நிம்மதி' என்ற பாடல் திரையில் வந்தால் அரங்கமே அதிரும். அப்பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகள் வைத்து இசை கம்போஸ் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதிக பட்சமாக அப்பாடலுக்கு இசைக் கருவிகளைப் பயன்படுத்திய எம் எஸ்வி அதே நடிகர் திலகம் நடித்த 'பாகப் பிரிவினை'யில் 'தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசை அமைத்தார்.

* சினிமா இசை என்றாலே அதைத் திரையில் தான் கேட்க முடியும் என்ற நிலை இருந்த சூழலில் முதன்முறையாக இசைக் கருவிகளை மேடைக்குக் கொண்டுவந்து மக்கள் முன் இசைத்து இந்திய அளவில் சாதனை புரிந்தார். அந்த நிகழ்ச்சியைச் சேலத்தில் நிகழ்த்தினார்.

*இந்திய இசையை மட்டுமே தமிழ் படங்களில் பயன்படுத்தி வந்த நிலையில் கதைக் களத்துக்கு ஏற்ப உலக இசையைத் தமிழில் புகுத்தினார். மீண்டும் அந்த புதுமையை நடிகர் திலகம் நடித்த சிவந்த மண் படத்தில் செய்து காட்டினார். எகிப்திய பிரமிடுகளுக்கு இடையே சிவாஜி, காஞ்சனா ஆடியப் பாடிய 'பட்டத்து ராணி' பாடலுக்கு எகிப்திய இசையையும் அதே போல் காவல்காரன் படத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது' பெர்ஷியன் இசையையும் அமைத்தார்.

*எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் 'பன்சாயி, காதல் பறவை' களிலும் ஜப்பான் இசையும் 'யார் அந்த நிலவு படலுக்கு லத்தீன்', 'கண் போன போக்கிலே கால் போகலாமா' பாடலூகு ரஷ்யா இசையும் 'முத்தமிடும் நேரமெப் போ' பாடலுக்கு , மெக்சிகன் இசையையௌம் அமைத்து புதுமை புகுத்தினார்.

*முத்துராமன், தேவிகா நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'முத்தான முத்தல்லவோ' பாடல் தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் உருவாகத் தான் இரண்டு மாதம் ஆனது!

• 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார்.

*மலையாள மண்ணில் உதித்த இந்த எம் எஸ்வி என்ற மாணிக்கம் தான் நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்ற பாடலுக்கு இசை அமைத்து தமிழுக்கு வணக்கம் செலுத்த வைத்தவர். இன்றைக்கும் அரசு விழா முதல் பிரமாண்ட விழாக்கள் வரை இப்பாடல் தான் தொடக்க விழா பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

* பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக் கொட யாராரோ.., பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தால்.., ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா, வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்.., எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம். போன்ற எண்ணற்ற பாடல்கள் எப்போது கேட்டாலும் செவிப்பறைகள் விழித்துக்கொள்ளும் கைவிரல்கள் தாளமிடும்.

*எம்.எஸ்.வி இசையைக் கையில் அலுமினிய தட்டு வைத்திருக்கும் பாமரனும் அதில் தாளம்போட்டுப் பாடிவிடும் அளவுக்கு எளிமையாக இருக்கும். அதனால் தான் அவரது இசை மாடி முதல் தெருக்கோடி வரை சென்றது.

• இசைஞானி இளையராஜாவுடன் 3 படங்களில் எம் எஸ் வி கைகோர்த்தார். 'மெல்லத் திறந்தது கதவு', 'செந்தமிழ்ப் பாட்டு', 'செந்தமிழ் செல்வன்' இருவரும் இணைந்து இசை அமைத்தனர்.

* எம்.எஸ்.விக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ அவருக்கு வந்து சேராமல் விருதுக்கான தகுதிகளை அந்த விருதுகள் தக்க வைத்துக்கொள்ளத் தவறி விட்டன. அதையெல்லாம் விட மெல்லிசை மன்னர் என்று மக்கள் தந்த விருது என்றென்றும் அவரது புகழைப் பறை சாற்றிக்கொண்டே இருக்கும்
* எம்.எஸ் வி என்ற இந்த மூன்றெழுத்து இசை பொக்கிஷத்தின் புகழுக்கும் பாராட்டுக்கும் பின்னால் அவரது வலிகளும் வேதனைகளும் அதிகம் இருந்தது. அதை எல்லாமே பழங்கதையாக்கி தனது வாழ்க்கையைச் சாதனையாக்கி விஸ்வரூபமாக உயர்ந்து நின்றார்.

You'r reading எம் எஸ் விஸ்வநாதன் வாழ்க்கை பக்கங்களில் ஒரு சிறு பயணம்.. கேரள வித்து தமிழகத்தின் சொத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சச்சின் பைலட் பதவி பறிப்பு.. காங்கிரஸ் அதிரடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்