மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்!

நாட்டு மக்கள் அனைவரும் பிணைக் கைதிகளைப் போல இருக்கின்றனர் பிரதமர் மோடியால் இந்திய அரசு அமைப்பே சரிந்து விட்டது என பன்னாட்டு ஊடகங்கள் விமர்சனம் செய்துள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளை பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளது இந்தியா. இந்நிலையில் மோடி அரசின் திறனற்ற நிர்வாகம் குறித்து பன்னாட்டு ஊடகங்கள் விமர்சித்துள்ளன. மோடியின் திறமையின்மையால் இந்திய அரசு நிலை குலைந்து இருப்பதாகவும், அரசு அமைப்பே சரிந்து போயிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கும் செய்தி ஊடகங்கள் நாட்டின் தலைநகரம் பிணைக் கைதி நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.

உலக நாடுகள் பலவற்றில் தடுப்பூசி வெற்றிகரமாக செயல்படத் துவங்கி கொரோனா பரவல் வெகுவாக குறைந்திருக்கும் வேளையில், அந்த நாடுகளுக்கெல்லாம் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் இந்தியாவில் கரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மருத்துவ ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை, கொத்துக் கொத்தாக இறக்கும் மக்கள், எங்கு பார்த்தாலும் புதை குழிகள், எரி மேடைகள் என நாளுக்கு நாள் இந்திய மக்களின் துயரம் அதிகரித்து வரும் நிலையில், இந்தி யாவில் என்னதான் நடக்கிறது, அரசாங்கம் என ஒன்று இருக்கிறதா? என்று உலகின் பல்வேறு முன்னணி நாளிதழ்கள் பலவும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

தி கார்டியன்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில நாளிதழான தி கார்டியன் நிர்வாகம் சீரழிந்து விட்டது : கொரோனா நரகத் தில் இந்தியர்கள் என்ற தலைப்பில் ஏப்ரல் 21 அன்று செய்திக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கூட்டத்தை எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பார்த்ததில்லை என்று மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைத் தொட்டு ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை, “இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசை வரிசையாக நிற்கின்றன; ஆனாலும், தங்களின்கட்சி உறுதியாக வெற்றிபெறப் போகிறது என்றுகருதும் மேற்கு வங்கத்தில் பாஜக தனது தேர்தல் பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை.

பிரதமர் மோடியும், அவரது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அந்த வாரத் தில்கூட பொதுக் கூட்டங்களையும், பேரணிகளையும் தொடர்ந்து நடத்தினர். கூட்டம் சேரவேண்டாம், தனி மனித இடைவெளி வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக கூட்டம் சேர்ப்பதிலேயே இருவரும் கவனமாக இருந்தனர்” என்று விமர்சித்துள்ளது.

சுகாதார வல்லுநர்களால் வழங்கப்பட்ட எச்சரிக் கையை, மோடி அரசாங்கம் புறக்கணித்ததே, கரோனா நெருக்கடிக்குக் காரணம் என்று கூறியுள்ள தி கார்டியன், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் உண்மையான கொரோனா எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று சந் தேகமும் எழுப்பியுள்ளது. ஏனெனில் அங்குள்ள மருத்துவமனைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று கார்டியன் குறிப்பிடுகிறது.

டெய்லி மெயில்


இங்கிலாந்தின் மற்றொரு நாளிதழான டெய்லி மெயில் ஏடு, நாசிக் நகரில் ஆக்சிஜன் கசிவால் 22 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஒருபுறம் மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதையும், மறுபுறம் கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுவதையும் பதிவு செய்துள்ளது.

நியூயார்க் டைம்ஸ்

இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுப் பாட்டை மீறி விட்டது என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், கும்பமேளா கொண்டாட்டம், திரளான தேர்தல் திருவிழா ஆகியவற்றை பதிவு செய்துள்ள லட்சுமிநாராயணன், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆங்காங்கே கரோனாவால் இறந்தவர்களின் பிணங்கள் எரிக்கப்படும் சம்பவங்களை விவரித்துள்ளார். இரண்டாவது அலை பற்றி மோடியிடம் எந்த முன்யோசனையும், திட்டமும் இல்லை. கொரோனாவை எதிர்கொள்ளவும் அவர் ஆயத்தம் ஆகவில்லை. அதுவே இவ்வளவு பெரிய பாதிப்புக்குக் காரணம் என்று லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.

உலகின் தினசரி கரோனா தொற்றில் 40 சதவிகிதம் இந்தியாவில்தான் ஏற்படுகிறது என்ற புள்ளிவிவரத்தையும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சிட்னி மார்னிங் ஹெரால்ட்

ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கை, இந்தியாவில் நடந்த கும்பமேளா, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், மோடி அரசின் முன்னுக்குப் பின்னான அறிவிப்புகள், பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் குறித்து விளக்கமாக பதிவிட்டுள்ளது.

அதாவது, மோடியின் தேர்தல் பிரச்சாரம், ஆயிரக்கணக்கானோர் கூடிய அவரது பொதுக்கூட்டங்கள், கரோனா தொற்றுப் பரவல் சூப்பர்ஸ்ப்டெரராக மாறுவதற்குக் காரணமான லட்சக்கணக் கானோர் கூடிய ஹிந்து திருவிழாவான கும்பமேளாவிற்கு மோடி அரசாங்கம் அளித்த ஒப்புதல் ஆகியவற்றைக் கொண்டு, கரோனா தொற்றுப் பரவலில் இந்தியா ஒரே நாளில் உலக சாதனைகளை முறியடித்து விட்டது என்றும் சாடியுள்ளது

You'r reading மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோவேக்சின் கொரோனாவின் 617 வகை மாதிரிகளை வீரியமிழக்க செய்யும் என கண்டுபிடிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்