விளைந்தது தித்திக்கிறது விலையோ கசக்கிறது: கரும்பு விவசாயிகள் கண்ணீர்

சிவகங்கை வட்டாரத்தில் கரும்புக்கு போதிய விலை கிடைக்காததால் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

சிவகங்கை அருகே சாலூர், இடைய மேலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். சாலூர் பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். கடந்த சில வருடங்களாக கரும்புக்கு நல்ல விலை கிடைக்காததால் பலர் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு விட்ட நிலையில் தற்போது 150 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்ய 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய தண்ணீர் கிடைக்காதது போன்ற பிரச்சனைகளைச் சமாளித்து கரும்பை விளைவித்தாலும் அதை மொத்தமாக வாங்க வரும் வியாபாரிகள் சொல்லும் விலை கரும்பு ஒன்றுக்கு விலை 5 ரூபாய் என்பது தான்.

முன்பெல்லாம் இரண்டு மூன்று மாதங்கள் முன்பு வியாபாரிகள் சாலூரில் முகாமிட்டு மொத்த கரும்பிற்கும் நல்ல விலை பேசி முழு தொகையும் கொடுத்து செல்வதுண்டாம். இந்த ஆண்டு அந்த நடைமுறை இல்லாமல் போய்விட்டது.வியாபாரிகளே பரவாயில்லை என்பது போலப் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் கரும்புக்காக அதிகாரிகள் கரும்பு ஒன்றை ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் தருமாறு நிர்ப்பந்தம் செய்வதால் கலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

பொங்கல் பரிசு வழங்கும் அரசு ரேஷன் கடைகளுக்காக எங்களைப் போன்ற விவசாயிகளிடம் கரும்பை அரசு நல்ல விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்தால் தான் எங்களால் பிழைக்க முடியும் என்கிறார்கள் இந்த விவசாயிகள்.

You'r reading விளைந்தது தித்திக்கிறது விலையோ கசக்கிறது: கரும்பு விவசாயிகள் கண்ணீர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டசபை தேர்தல் வருது.. சென்னையில் குப்பைக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்