ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுக்க போகும் ஆயுதம் ldquoதிமுகவில் கோலோச்சும் அதிமுக மாஜிக்கள்rdquo? வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்!

Party Cadres to revolt against AIADMK Former Minsiters in DMK?

அதிமுகவில் இருக்கும் வரை பரம எதிரி...அதே நபர் திமுகவுக்கு வந்துவிட்டால் மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர் அடுத்தது அமைச்சர் பதவி.. திமுக என்பது அதிமுகவின் ஜெராக்ஸ் என்றாகிவிட்ட நிலையில் நாங்கள் எல்லாம் காலம் காலமாக கட்சிக்கு உழைத்து என்னதான் பயன் என கொந்தளிக்கின்றனர் உடன்பிறப்புகள். இதையே தமது ஆயுதமாக மு.க. அழகிரி கையிலெடுக்கவும் வாய்ப்புள்ளது என்கின்றன மதுரை வட்டாரங்கள்.

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவுவது என்பது புதிதானது அல்ல. எம்ஜிஆர்- கருணாநிதி காலத்திலேயே தலைகள் தாவியது உண்டு. ஆனால் அண்மைக்காலமாக அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய பெருந்தலைகள் எல்லாம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்து கொள்வதும் அதிமுகவில் இருந்து வந்து சேர்ந்த உடனேயே செந்தில் பாலாஜி போல் மாவட்ட பொறுப்புகளை பெற்றுக் கொள்வதும் ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது திமுகவில் கோலோச்சக் கூடிய தலைவர்களாக இருக்கும் எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்ஆர், ஈரோடு முத்துசாமி, கரூர் செந்தில் பாலாஜி, நெல்லை கருப்பசாமி பாண்டியன், தருமபுரி முல்லைவேந்தன், சேலம் செல்வகணபதி அனைவருமே அதிமுகவில் இருந்து தாவியவர்கள். இவர்கள் அனைவருமே அந்தந்த மாவட்டங்களில் குறுநில மன்னர்களாகிவிட்டனர்.

இவர்களை எதிர்த்து காலம் காலமாக அந்த மாவட்டங்களில் வேலை பார்த்த திமுகவினர் இப்போது இந்த மாஜி எதிரிகளிடம் கை கட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டு விட்டது. குறிப்பாக எ.வ.வேலு, நடிகர் பாக்கியராஜ் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளராக இருந்தவர்.

இன்று அந்த எ.வ.வேலுவின் கண்ணசைவில்தான் ஒட்டுமொத்தமாக திமுகவே இயங்கி வருகிறது என்கிற அதளபாதாள நிலை உருவாகிவிட்டது. திமுகவின் கிச்சென் கேபினட் முழுவதையும் தம் வசப்படுத்தி வைத்துக் கொண்டு திமுகவின் அறிவிக்கப்படாத நிழல் அல்லது செயல் தலைவராக வலம் வருகிறார் எ.வ.வேலு. இந்த வேலுதான் கருணாநிதியின் நினைவிடத்தில் பஜனை பாடி திராவிட இயக்கத்தின் மானத்தை வங்கக் கடலில் கப்பலேற்றியவர்.

இதே எ.வ.வேலுதான் திராவிடர் கழக சிந்தனையாளரான பேராசிரியர் முனைவர் தெய்வசிகாமணி என்கிற பொன்முடியை ஓரம்கட்டி விழுப்புரம் மாவட்டத்தையும் கபளீகரம் செய்ய நினைக்கிறார். அதற்கும் திமுக தலைமை இடம் கொடுத்து வருகிறது.

ஆகக் குறைந்தபட்சம் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களைக் கூட உச்சரிக்க தெரியாத இப்படியான பட்டாளங்கள்தான் இன்று ஸ்டாலினின் தளகர்த்தகர்கள். அதே நேரத்தில் திராவிட சித்தாந்தம் பேசி, கருணாநிதியின் கட்டளையையேற்று கைவிலங்கோடும் கால்விலங்கோடும் கொட்டடிகளிலும் குண்டாந்தடி அடிகளிலும் தம் வாழ்வை சர்வபரி தியாகத்துக்கும் கொடுத்த உன்னதமான எத்தனையோ களப் போராளிகள் எட்டி நின்று நம்ம கட்சியா இப்படி என பெருமூச்சுவிடுகிற பேரவலத்தை உருவாக்கிவிட்டனர்.

இதைவிட பெருங்கொடுமை அதிமுகவில் இருந்து ஊழல் செய்து வழக்குகளை எதிர்கொள்கின்றன இந்த கும்பல் திமுகவில் சேர்ந்துவிடுகிறது.. திமுகவில் இணைந்த பின்னர் அதிமுக அமைச்சரவையில் செய்த ஊழலுக்கு தண்டனை கிடைக்க அது திமுகவுக்கு மாறாத கரையாகிப் போய்விடுகிறது. செல்வகணபதி, இந்திரகுமாரி ஆகியோரை சுட்டிக்காட்டும் திமுக உடன்பிறப்புகள் இது என்ன தண்டனை கொட்டடியா? எனவும் கொந்தளிக்கின்றனர்.

திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தாமல் அமைதி காத்திருக்கும் அழகிரி இந்த ஒரு விவகாரத்தை கையில் எடுத்து களத்துக்கு வந்துவிட்டால்... ஸ்டாலின் தலைமைக்கு அக்கட்சி தொண்டர்களாலேயே மிகப் பெரும் நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது என்பது அண்ணா அறிவாலய சீனியர்களின் கருத்து. ஏனெனில் திண்டுக்கல்லில் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய அழகிரி இதைத்தான் மையமாக வைத்து கருப்பசாமி பாண்டியனையும் முல்லைவேந்தனையும் வெளுத்து வாங்கியிருந்தார்.

தற்போதைய நிலையில் மு.க. அழகிரி தம்முடைய அதே பாணியில் இதை கையிலெடுத்துவிட்டால்... நிலைமை என்னவாகும் என தெரியாது என்கின்றனர் திமுக முன்னணி நிர்வாகிகள்.

You'r reading ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுக்க போகும் ஆயுதம் ldquoதிமுகவில் கோலோச்சும் அதிமுக மாஜிக்கள்rdquo? வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'ஆபரேஷன் ஸ்டாலின்'.. 74 இடங்களில் வருமான வரி சோதனை நடத்துவதன் பகீர் பின்னணி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்