பிக் பாஸின் புதிய டாஸ்க்.. திருடர்கள் கூட்டம்.. 38வது நாளன்று என்ன நடந்தது ??

by Mahadevan CM, Nov 11, 2020, 13:16 PM IST

"கேட்டா கொடுக்கற பூமி இது" பாடலோடு துவங்கியது நாள். நிறைய பேர் ஆட வரலை. ஆரி ப்ரோ முன்னணில நின்னு ஆடிட்டு இருந்தாரு. இருக்கு.. இதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு.

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் "பாட்டி சொல்லை தட்டாதே". ஒரு ஊர்ல ஒரு பாட்டியாம். அந்த பாட்டிக்கு நிறைய சொத்து இருக்காம். அந்த பாட்டியோட மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ஒரு பொண்ணு மட்டும் கூடவே இருக்கு. இந்த பாட்டிக்கு அவங்க கூட இருக்கனும்னு ஆசை. ஆனா யாரும் வரதே இல்லை. பாட்டியோட சொத்து மேல எல்லாருக்கும் ஒரு கண்ணு. ஆனா சொத்து வேணும்னா எல்லாரும் பாட்டியை பார்க்க வரணும்னு சொல்லவும் எல்லாரும் வந்துட்டாங்க. அதுல சொத்துப் பத்திரத்தை திருடறதுக்கும் ஒரு கும்பல் இருக்கு. சொத்துக்காக சொந்தம் எல்லாம் ஒன்னா ஊருக்கு வந்துருக்கு. யார் பாட்டியை நல்லா பார்த்துகிட்டு சந்தோஷபடுத்தறாங்களோ அவங்களுக்கு சொத்து கிடைக்கும்.

இப்படி ஒரு கான்சப்ட் ரெடி பண்ணி ஹவுஸ்மேட்ஸ்க்கு அறிவிப்பு வருது. அர்ச்சனா தான் அந்த பாட்டி.

ஆரி மூத்த மகன். சுச்சி அவர் மனைவி.

ஜித்து பாய் ரெண்டாவது பையன். பொண்டாட்டி தாசன். சனம் அவர் பொண்டாட்டி. பாலா அவங்க பையன், ஷிவானி அவங்க பொண்ணு.

நிஷா மகள், ரியோவை லவ் டார்ச்சர் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க.

சோம் இன்னொரு பையன். அவனுக்கு ஜோடி ரம்யா. பொண்ணு கேப்பி. ஆனா சொத்துக்காக நடிக்க வந்துருக்காங்க.

பாட்டியை பார்த்துக்கறது சம்யுக்தா, அவங்க பொண்ணு அனிதா... பாட்டி மிகவும் நம்பக்கூடிய ஒரு ஆள்.

ஒரு நல்ல டாஸ்க் தான். ஆனா இந்த குரூப்ல யார் இதை சரியா செய்ய போறாங்க.

குரூப்பா உக்காந்து டாஸ்க் பத்தி கேரக்டர் பத்தி பேசிட்டு இருக்கும் போது, தனக்கு கொடுக்கப்கேரக்டர் சரியில்லைனு வழக்கம் போல அனிதா புலம்பிட்டு இருந்தாங்க. அப்பனு பார்த்து ரியோவுக்கு சந்திராஷ்டமம் போல. வாயை வச்சுட்டு சும்மா இருக்காம அனிதாவுக்கு அட்வைஸ் பண்ண, வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிகிச்சு. விளையாட்டுக்கு சொன்னேன்னு ரியோ எத்தனையோ தடவை சொல்லியும் அனிதா கேக்கறதா இல்லை. கடைசில ரியோ டென்சன் ஆகிட்டாரு. நான் செஞ்சதை யாராவது தப்புனு சொன்னா உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கறேன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

இந்த மாதிரி டாஸ்க்ல ஏதோ கொஞ்சமா காமெடியா முயற்சி செய்யறதே ரியோவும், நிஷாவும் தான். ஆனா டாஸ்க் ஆரம்பிக்கும் போதே ரியோவை டென்சன் பண்ணி விட்ருச்சு அனிதா.

பஞ்சாயத்து கேப்டன் ஆரி ப்ரோ கிட்ட போகுது. ரியோ சொல்றதை அமைதியா கேட்டுகிட்டாரு. தீர்ப்பு எதுவும் சொல்லலை. கால்ல விழுகறேன்னு நீ எப்படி சொல்லலாம்னு நிஷா ஒரு பக்கம் டென்சன் ஆகி கத்திட்டு இருந்தாங்க.

ஒரு வழியா டாஸ்க் ஆரம்பிச்சது. அப்பவே லாக்கர்ல இருந்து எதையோ திருடி ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தாங்க சோம் & கோ.

சனம், சாம் ரெண்டும் பேரும் புடவைல அம்சமா இருந்தாங்க. ஆனா அதை ரசிக்கறத்துக்குள்ள சனம் சாமியாட ஆரம்பிச்சது. பாலா பையனா வந்தது அவங்களுக்கு பிடிக்கலை போல, கூடவே டாஸ்க்கா இருந்தாலும் நான் சனம் கூட பேச மாட்டேன்னு போய்ட்டாரு பாலா. இது ரெண்டும் சேர்ந்து நான் டாஸ்க் செய்ய மாட்டேன்னு அடம்பிடிச்சுட்டு இருந்தாங்க சனம். வீட்டுக்குள்ள 13 பேர் இருக்காங்க, ஆனா அம்மணி கண்ணுக்கு பாலா பட்டும் தான் தெரியுது. இதை வெறும் டாஸ்க்கா பாருங்கனு ஆரி, ஜித்து பாய் எல்லாம் அட்வைஸ் பண்ணியும் கேக்காம பிக்பாஸ் கிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.

இந்த பக்கம் மத்தவங்க எல்லாரும் டாஸ்க்ல இறங்கி விளையாடிட்டு இருந்தாங்க. பாட்டிம்மா ஒவ்வொரு பேமிலியா கூப்பிட்டு பத்திரத்தை எப்படி பத்திரபடுத்தறதுனு பேசிட்டு இருக்கும் போதே, சோம் & ரம்யா கேங் பத்திரத்தை அடிச்சுடறாங்க.

பிக்பாஸ் கிட்ட பேசப்போன சனம்க்கு சாதகமான பதில் கிடைக்கல. யார் கிடைப்பாங்கனு காத்துட்டு இருந்த போது ஆரி வந்து மாட்டினாரு. கிச்சன் பக்கம் வந்தவரு கண்ணுல குப்பைல சாப்பாடு கொட்டினது தெரியுது. அது யாருனு சனம் கிட்ட கேட்டாரு. அவ்வளவு தான். முதல்ல எனக்கு தெரியாதுனு சொன்ன சனம், கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நான் கூட கொட்டிருக்கலாம்னு சொல்லவும், கேப்டன் ஆரி ப்ரோக்குள்ள தூங்கிட்டு இருந்த அந்த நேர்மையான போராளி முழிச்சுகிட்டாரு. அதுக்கப்புறம் ஆரியும் விடலை, சனமும் விடலை. ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை மாத்தி மாத்தி பேசி, அது கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வாக்குவாதமா மாறிடுச்சு. பேசறதுக்கு பாயிண்ட் இல்லாத சனம் கண்டதையும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆரியாவது நிறுத்துவார்னு பார்த்தா, ம்கூம் வாய்ப்பே இல்லை.

அனிதா = சனம் = ஆரி... மூணு பேரும் ஒன்னு தான். மூணு பேருக்குமே தான் பேசறது மட்டும் தான் சரினு நினைக்கறாங்க. எதிராளி என்ன விளக்கம் கொடுத்தாலும் ஏத்துக்க மறுக்கறாங்க. எந்த ஒரு கட்டத்திலும் விவாதத்தை முடிக்க மாட்டேங்கறாங்க. பேசிட்டே இருக்காங்க.

ஆரி - சனம் சண்டைக்கான விதை நேத்து காலையிலேயே விழுந்துருச்சு. அன்சீன்ல அதே கிச்சன் பஞ்சாயத்து நேத்தும் நடந்தது. அந்த பிரச்சினையும் உப்புபெறாத விஷயம் தான். சனம் ஏதோ ஒரு தட்டை கழுவிட்டு இருக்க, அங்க வந்த ஆரி, நீங்க ஏன் இதை பண்றிங்கனு கேட்டாரு. ஒரு தட்டு தான், அதனால கழுவி வச்சேன்னு யதார்த்தமா சனம் பதில் சொல்றாங்க. அந்தந்த டீம் வேலையை அவங்கவங்க செய்யனும். நீங்க எதுக்கு வெசல் வாஷிங் டீம் வேலையை செய்யறிங்கனு பிடிச்சுட்டாரு. அதுவும் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து வாக்குவாதமா முடிஞ்சுது.

அதே மாதிரி காலையில டிபன் செஞ்ச உடனே அதை டேஸ்ட் பார்த்த அனிதா, உப்பு அதிகமா இருக்குனு சொல்றாங்க. பக்கத்துல இருந்த ஆரியும் டேஸ்ட் பார்த்துடு, "இல்லையே எல்லாம் சரியா இருக்கு. உங்களுக்கு உப்பு, புளி, காரம், இனிப்பு எதுவுமே தெரியலைனு" எக்ஸ்ட்ரா பிட் போட, அது போதுமே அனிதாவுக்கு.... அதுக்கு ஒரு சண்டை..... நல்லவேளை நமக்கு அதை காட்டலை.....

காலை டிபனை எடுத்து டைனிங் டேபிள்ள வச்சுட்டு போய்ட்டாங்க. அதை பார்த்து நிஷாவும், அர்ச்சனாவும் வருத்தபட்டாங்க. பரிமாறினா தானே பசியாறும்னு அவங்க சொன்னது நிஜம் அந்த பக்கம் நம்ம ஜித்து பாய்க்கு கத்திரிக்கா பிடிக்காதுனு ஒரு ஆம்லெட் கேட்டாரு. யாரை பார்த்து கேட்கிறாய் ஆம்லெட்? அப்படினு ஆரியும், சனமும் பேச ரெடியாகும் போதே எஸ்கேப் ஆகிட்டாரு. ஒரு ஆம்லெட் கேட்டா தரமாட்டேங்கறாங்கனு அர்ச்சனா கிட்ட சொல்லி புலம்பினாரு.

பத்திரம் காணாம போனது ரொம்ப நேரம் கழிச்சு தான் தெரியுது. அது தெரிஞ்ச உடனே நம்ம ஜித்து பாய், சோம் எங்கனு தேடறாரு. ஆனா அவர் சொல்றதை யார் கேக்கறாங்க.

ஒரு நல்ல டாஸ்க். கொஞ்சம் புதுமையா, ஒவ்வொருத்தரும் அந்த கேரக்டரை சிறப்பா செஞ்சாலே நல்லாருக்கும். இந்த வாரம் அவ்வளவு தான் போலருக்கு.

You'r reading பிக் பாஸின் புதிய டாஸ்க்.. திருடர்கள் கூட்டம்.. 38வது நாளன்று என்ன நடந்தது ?? Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை