பயிர் காப்பீடு திட்டம் என்பது, விவசாயிகளின் இழப்பீடுகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம், விவசாயி சாகுபடி செய்யத் தொடங்கிய பிறகு அதிக மழை அல்லது வறட்சி காரணமாக இழப்பீடு ஏற்பட்டிருந்தாலோ அல்லது அறுவடை செய்த பயிர் மழையினால் பாதிக்கப்பட்டாலோ அரசு அவர்களுக்கு இழப்பீடு எவ்வளவு எனக் கணக்கீடு செய்து அதற்கு ஏற்றார் போல் , மானியம் வழங்கும்.
தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டம் துவங்கிய 2016-2017ஆம் ஆண்டு முதல் 2020 வரை ரூபாய் 8155.33 கோடி இழப்பீட்டுத் தொகை, சுமார் 40.84 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுள் 70 சதவீத விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த பயிர் காப்பீடு திட்டம் யாருக்கு பயன்படும் , அதனை எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதுப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்..!
தமிழகத்தில் ஓரியன்டல், நேஷனல் அக்ரி இன்சூரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மூலம் பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது.
பயிர் காப்பீடுக் கட்டணத்தைப் பொறுத்தவரை, மாவட்டங்களின் பயிர் சாகுபடி பரப்பு, மழை பெய்யும் அளவு, அங்கு நிலவும் சீதோஷணநிலை, இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பாதிப்பு, கடந்த காலங்களில் காப்பீடு செய்யப்பட்டப் பரப்பு, வழங்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் தொகை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு, காப்பீடு நிறுவனங்களால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு பயிருக்கான இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது.
காப்பீடு செய்ய அருகில் உள்ள CSC பொது சேவை மையம், தேசிய வங்கிக்கிளை, பிராந்திய வங்கிக் கிளை, கூட்டுறவு வங்கிக் கிளை மற்றும் தனியார் வங்கிக் கிளைகளை அணுகவும்.
மகசூல் விவரம் பெறப்பட்ட 21 நாட்களுக்குள் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத்தொகை வழங்கவேண்டும் என்பது விதி. எனினும் பல்வேறு இடர்பாடுகளால் இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, விரைவாக பயிர் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு சென்றடைய வாரந்தோறும் சம்பந்தப்பட்ட பயிர் காப்பீடு நிறுவனங்கள், புள்ளியியல்துறை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாநில அளவிளான வங்கிகளின் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு இந்த இடர்பாடுகள் உடனுக்குடன் களையப்படுகின்றன.
காப்பீடு நிறுவனங்களால் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதம் ஆகும் போது, சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவனங்களுக்கு 12 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு இழப்பீடு 2019-ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் 6.13 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில், 384 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர் மட்டுமே பயனாளி ஆவார். எனவே பட்டா மாற்றாமல் விவசாயம் செய்து வரும் குத்தகைக்காரர், கண்டிப்பாக அடங்கலில் தங்களது பெயரில் விவசாயம் செய்து வருவதைக் குறிப்பிட்டு அடங்கலைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
You'r reading விவசாயிகளின் இழப்பீடுக்காக அரசு தரும் மானியம்...எப்படி விண்ணப்பிப்பது? Originally posted on The Subeditor Tamil