வீட்டுக்குள் புகுந்து அத்துமீறல்: அதை நறுக்கிய பெண்
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து வன்புணர்வு செய்ய முயற்சித்தவரின் ஆண்குறியை நறுக்கிய பெண், போலீசாரிடம் புகாரும் அளித்துள்ளார். அத்துமீறிய நபர் ஆண்குறி நறுக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாநிலத்தில் கடந்த வியாழன் அன்று நள்ளிரவு இச்சம்பவம் நடந்துள்ளது. உமாரியா என்ற கிராமத்தில் 45 வயது பெண் தன் 13 வயது மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்திருக்கிறார். அவரது கணவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். இரவு 11 மணியளவில் 45 வயது நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்துள்ளார். வெளி நபர் உள்ளே வந்ததும் திருடன் என்று நினைத்து பையன் வீட்டுக்கு வெளியே ஓடியுள்ளான். உள்ளே வந்த நபர், அந்தப் பெண்ணை தாக்கி, பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளார். 20 நிமிடம் அப்பெண் தன்னை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். நிலைமை கைமீறிய போது கட்டிலின் கீழ் கிடந்த அரிவாளை எடுத்து அந்த நபரின் ஆண்குறியை அப்பெண் அறுத்துள்ளார்.
காதி புறக்காவல் காவல்நிலையத்திற்கு இரவு 1:30 மணியளவுக்கு சென்று அப்பெண் புகார் கூறியதை அடுத்து, போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி செய்யப்பட்ட பின்னர், சிதி மாவட்ட மருத்துவமனைக்கும் அங்கிருந்து சஞ்சய் காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அந்நபர் மாற்றப்பட்டுள்ளார். பெண்ணை வன்புணர்வு செய்ய முயற்சித்தல், வீடு புகுதல் போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது பதியப்பட்டுள்ள நிலையில், அந்நபர், பெண்ணின் மீது புகார் கொடுத்துள்ளார்.
You'r reading வீட்டுக்குள் புகுந்து அத்துமீறல்: அதை நறுக்கிய பெண் Originally posted on The Subeditor Tamil
More Crime News