ஆஸ்துமா தொல்லை அகலுகிறது இளமை தோற்றத்தை தக்க வைக்கிறது... இதை மெல்லுங்கள்!

by SAM ASIR, Feb 25, 2021, 16:38 PM IST

புதினா இலைகளில் கலோரி (ஆற்றல்), புரதம் மற்றும் கொழுப்பு ஆகியவை மிகக்குறைவாக உள்ளன. அதேவேளையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிக அளவில் உள்ளன.

கர்ப்பிணிகள்

கருத்தரித்தால் வரும் குமட்டலைப் புதினா இலைகள் குறைக்கின்றன. புதினா இலைகளை மெல்லுவதால் அல்லது நுகர்வதால் கர்ப்பிணிகளுக்கு வரும் குமட்டல் உணர்வு குறையும்.

செரிமானம்

புதினா இலைகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் (ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள்), மென்தால் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் ஆகியவை உள்ளன. இவை, செரிமான நொதிகளுக்கு (என்சைம்) செரித்தலில் உதவி செய்கின்றன. புதினா இலைகளுக்குப் பூஞ்சைகளுக்கு எதிராகச் செயல்படும் இயல்பு உள்ளது. ஆகவே வயிற்றில் தசைப்பிடிப்பு மற்றும் அமிலத்தன்மை (அசிடிட்டி), உப்பிசம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

ஆஸ்துமா

நெஞ்சில் சளி அடைப்பவர்கள் தொடர்ந்து புதினாவைச் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும். புதினாவில் மெத்தனால் உள்ளது. அது நுரையீரலில் கட்டும் கபத்தை இளக்குகிறது. மூக்கின் சவ்வுகள் வீங்கியிருந்தால் அதைச் சுருங்கச் செய்து எளிதாகச் சுவாசிக்க உதவுகிறது. இதற்குப் புதினாவைத் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

சளி

சாதாரண சளிக்குப் புதினா இலைகள் நல்ல நிவாரணியாக விளங்குகின்றன. புதினா, நாசி, தொண்டை, நுரையீரல் பாதை, சுவாச குழாய் எல்லாவற்றையும் சுத்திகரிக்கிறது. ஆகவே, தொடர் இருமலின் காரணமாக எழும் சிரமத்தைக் குறைக்கிறது.

தலைவலி

புதினாவில் இருக்கும் மென்தால் தசைகளை இளக்குவதால் வலி குறைகிறது.புதினாவின் சாற்றை நெற்றியிலும் தாடையிலும் தடவினால் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். புதினா தைலம் மற்றும் எண்ணெய்யும் தலைவலியிலிருந்து குணமளிக்கும்.

மனச்சோர்வு

புதினா, வாசனை மிக்கது. அது மன அழுத்தத்தைக் குறைக்கும். மனதுக்குப் புத்துணர்வு அளிக்கும். மனச்சோர்வை மாற்றக்கூடிய கொரிஸ்டால் என்னும் ஹார்மோனின் அளவை சீராக்கப் புதினா உதவுகிறது. புதினா எண்ணெய்யை நுகர்ந்தால் இரத்தத்தில் செரோடோனின் என்னும் பொருள் அதிகரிக்கும். செரோடோனின், மன இறுக்கத்தை மாற்றும்.

சருமம்

புதினாவில் பி-காம்ப்ளக்ஸ் உள்ளது. இது சரும நலனைப் பேணக்கூடியது. அழற்சியைத் தடுக்கும் பண்பு புதினாவுக்கு உள்ளது. ஆகவே, பருக்களைக் குணமாக்குகிறது. புதினாவில் உள்ள சாலிசைலிக் அமிலம் பருக்களுக்கு எதிராகச் செயலாற்றும். இது சருமத்தைச் சுத்திகரிக்கக்கூடியது. உடலிலுள்ள நிலையற்ற அணுக்களை (ஃப்ரீ ராடிகல்ஸ்) அகற்றி சருமத்திற்கு இளமையான தோற்றத்தை அளிக்கிறது. இறந்த செல்களையும் மாசுகளையும் சருமத்திலிருந்து அகற்றுவதோடு, ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்திற்குப் பொலிவான தோற்றத்தைப் புதினா அளிக்கிறது.

வாய்

புதினா இலைகளை மெல்லுவதால் வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. புதினாவிலுள்ள வாசனை எண்ணெய் சுவாசத்திற்குப் புத்துணர்வு அளிக்கிறது. பெப்பர்மிண்ட் எண்ணெய் கொண்டு மவுத்வாஷ் செய்தால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் அழிகின்றன. ஈறுகளும், பற்களும் ஆரோக்கியம் பெறுகின்றன.

மூளை

புதினாவிலுள்ள இரும்புச் சத்து, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை இரத்த சிவப்பு நிறமியான ஹீமோகுளோபினின் அளவை அதிகரிப்பதோடு மூளையின் செயல்பாட்டையும் தூண்டுகின்றன. புதினா இலைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து புதினாவைச் சாப்பிட்டு வந்தால், விழிப்புணர்வு அதிகரிக்கும்; நினைவாற்றல் கூடும்; புத்திக்கூர்மையோடு தொடர்புடைய செயல்திறன் அதிகரிக்கும்.

உடல் எடை

புதினா, செரிமானத்தையும் உடலின் வளர்சிதை (மெட்டாபாலிசம்) மாற்றத்தையும் தூண்டுகிறது. ஊட்டச்சத்துகளை உறிஞ்சத் துணை புரிகிறது. செரிமானமும் வளர்சிதை மாற்றமும் அதிகரிப்பதால் உடல் எடை குறைகிறது.

You'r reading ஆஸ்துமா தொல்லை அகலுகிறது இளமை தோற்றத்தை தக்க வைக்கிறது... இதை மெல்லுங்கள்! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை