மாநிலக் கட்சிகளுடன் மத்தியில் 3-வது அணி ஆட்சி ..! தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர்.சுறுசுறுப்பு!

Telangana CM k. Chandrasekar Rao again gears up to form 3rd front:

by Nagaraj, May 7, 2019, 12:44 PM IST

தற்போது வரை நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலின் படி, மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஆட்சியமைக்கலாம் என்ற நம்பிக்கை 3-வது அணிக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் பணிகளில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சுறுசுறுப்பாகி விட்டார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெரும்பான்மை பெறுவது சந்தேகம் என்ற நிலை உருவாகியுள்ளதாகவே கணிப்புகள் பல கூறுகின்றன. தேர்தல் முடிவில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உருவாகி வருவதாகவே கூறப்படுகிறது. மே.வங்கத்தில் மமதா , உ.பி.யில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணி, தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ், ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சி, ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள் போன்ற மாநிலக் கட்சிகள் பெரும் வெற்றி பெறும் என்றே தெரிகிறது. இந்தக் கட்சிகள் சேர்ந்து 150 தொகுதிகள் வரை வெற்றி பெற்றால் 3-வது அணியை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்து விடலாம் என்று புதுக்கணக்குடன் சுறுசுறுப்பு காட்டத் தொடங்கியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.

3-வது அணிக்கு ஆதரவாக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் இடம் பெறச் செய்வது தான் கே.சி.ஆரின் திட்டமாம்.

இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயனை, திருவனந்தபுரத்தில் நேற்று சந்தித்தார் கே.சி.ஆர். பினராயி விஜயனின் இல்லத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனையில் 3-வது அணி திட்டம் குறித்தே விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே கர்நாடக முதல்வர் குமாரசாமி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோ ருடனும் 3-வது அணி திட்டத்திற்கு தொலைபேசி மூலம் சம்மதம் பெற்று விட்டாராம் கே.சி.ஆர்.

அடுத்த கட்டமாக வரும் 13-ந் தேதி மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்திக்க கே.சி.ஆர்., திமுகவையும் 3-வது அணி பக்கம் வளைக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளாராம். காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் அமைக்க முடியாமல் போகும் பட்சத்தில் 3-வது அணி தான் திமுகவின் சாய்ஸாக இருக்கும் என்று கே.சி.ஆர் நம்புகிறார்.

3-வது அணி முயற்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையும் உருவானால் பிரதமர் பதவி ரேசில் மாயாவதி, கே.சி.ஆர், மம்தா என ஆளாளுக்கு பிடிவாதம் காட்டுவார்கள் என்றே தெரிகிறது. அதனால் தேர்தல் முடிவுகள் வந்த பின் கசமுசா ஏற்பட்டு விடாமல் இருக்க முன்கூட்டியே மாநிலக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டிவிடலாம் என்ற கணக்கில் கே.சி.ஆர்.சுறுசுறுப்பாகி விட்டார் என்று தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கே.சி.ஆரின் மகளும், நிஜாமாபாத் தொகுதி வேட்பாளருமான கவிதாவும் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு 3-வது அணி நிச்சயம் உருவாகும். தற்போதே பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் பேசி வருகிறோம் என்று சில நாட்களுக்கு முன்பு கவிதா வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மாநிலக் கட்சிகளுடன் மத்தியில் 3-வது அணி ஆட்சி ..! தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர்.சுறுசுறுப்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை