யாருக்கு எத்தனை இடங்கள் ..? நாளை கருத்துக் கணிப்பு முடிவுகள்..! பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் நிறுவனங்கள்..!
Loksabha election,Various institutions are ready to release Exit poll results tomorrow evening
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் தயாராக காத்துக் கிடக்கின்றன.
தேர்தல் வந்து விட்டாலே தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் என்பது சமீப காலமாக பிரபலமாகி விட்டது. நாளிதழ்கள் தொடங்கி பல்வேறு செய்தி டிவி நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் கருத்துக் கணிப்புகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுவதை வாடிக்கையாக்கி வருகின்றன. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தாலும், நாடு முழுவதும் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தி விடுவது சகஜமாகி விட்டது. கருத்துக் கணிப்பு என்ற கூறி கருத்துத் திணிப்புகளை வெளியிடும் சில அமைப்புகள் ஏதேனும் ஒரு அரசியல் பின்புலத்தில், தங்களுக்கு வேண்டிய கட்சிகளுக்கு ஆதரவாக முடிவுகளை வெளியிட்டு மக்களை குழப்பமடையச் செய்வதும் நடந்து வருகிறது.
இதனால் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட,தேர்தல் ஆணையம் சாட்டையைச் சுழற்றி கடும் கட்டுப்பாடுகளை விதித்து விட்டது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் முன்பு வரை தான் வெளியிட வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எனப்படும் ஓட்டுப் போட்டு வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளை, கடைசிக் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தவுடன் தான் வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடு.
அந்த ரீதியில் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் நாளை மாலை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடியும் வரை எந்தக் கருத்துக்கணிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் கருத்துக் கணிப்புகளை எடுத்துள்ள பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு கூட்டல் கழித்தல் போட்டு சர்வே முடிவுகளை தயார் நிலையில் காத்துள்ளன.
நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைவதுதான் தாமதம்.பிரேக்கிங் செய்திகளாக யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கப் போகிறது என்ற பட்டியலை ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் இஷ்டம் போல வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்த தயாராகி வருகின்றன. நாளை இறுதிக்கட்ட தேர்தல் முடிவடையும் நிலையில், 7 கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 23–ந் தேதி தான் வெளியாகிறது.அதுவரை இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கொண்டு, கூட்டல் கழித்தல் வேலைகளைப் பார்ப்பது தான் அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் நம்பலாம்.
பாஜகவுக்கு ஒரு சட்டம்... எதிர்க்கட்சி வேறு ரூல் சா..? தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
You'r reading யாருக்கு எத்தனை இடங்கள் ..? நாளை கருத்துக் கணிப்பு முடிவுகள்..! பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் நிறுவனங்கள்..! Originally posted on The Subeditor Tamil
More Politics News