உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி - மாயாவதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

UP assembly by-election, bsp will contest alone: mayavathi announced:

by Nagaraj, Jun 4, 2019, 14:07 PM IST

உ.பி.யில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி கிடையாது.பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதியுடனான நட்பு நீடிக்கும் என்றும், அகிலேஷ் யாதவ் தன் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் கூட்டணி வைக்க முடியும் என்றும் மாயாவதி கெடு விதித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி மெகா கூட்டணி அமைத்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பகையை மறந்து, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அகிலேஷ் யாதவுடன் கைகோர்த்தார் மாயாவதி . ஆனாலும் இந்தக் கூட்டணி படுதோல்வியைத் தான் சந்தித்தது. தேர்தல் தோல்வி இரு கட்சிகளுமே பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமாஜ் வாதியின் வாக்கு வங்கியான யாதவ ஓட்டுக்கள் தங்களுக்கு விழவில்லை என மாயாவதியும், பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியான தலித் ஓட்டுக்கள் சமாஜ்வாதிக்கு விழவில்லை என அகிலேஷ் தரப்பிலும் மாறி மாறி புகார் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று, மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து தன் கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்த மாயாவதி, சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறிப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாயாவதி கூறுகையில் தேச நலன் கருதியே, அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்தோம். ஆனால் சமாஜ்வாதி கட்சியை பாரம்பரியமாக ஆதரிக்கும் யாதவ சமுதாய மக்களே அந்த கட்சிக்கு வாக்காளிக்காததால், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வி அடைந்து விட்டனர். இதனால் இனிவரும் தேர்தல்களில் பகுஜன் கட்சி தனித்தே போட்டியிடும்.

சமாஜ்வாதி கட்சியுடனான உறவு அரசியல் சார்ந்தது மட்டுமல்ல, அதனையும் தாண்டி தொடரும். அகிலேஷ் மற்றும் டிம்பிள் யாதவ் என் மீது மிகுந்த மரியாதை செலுத்தியதை மறக்க முடியாது. அதேநேரத்தில், அரசியல் கட்டாயத்தை ஒதுக்கிவிட முடியாது. தற்போதைய பிரிவு நிரந்தரமானது அல்ல. அகிலேஷ் அரசியல் ரீதியாக வெற்றி பெறும் நிலையில், பின்னாளில் இணைந்து பணியாற்றுவோம்.ஒருவேளை அவர் அந்த முயற்சியில் தோற்கும் நிலையில், இருவரும் தனித்தே செயல்படுவது இருவருக்கும் நலமானதாக இருக்கும்.

அந்த அடிப்படையில் 11 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலை இரு கட்சிகளும் தனித்தனியே சந்திக்க உள்ளோம் என்று மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்தார். கூட்டணி கிடையாது என மாயாவதி அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் செய்தியாளர்களிடம் பேசிய, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனித்துப் போட்டியிட தங்கள் கட்சியும் தயார் என பெருந்தன்மையாக தெரிவித்துள்ளார்.

You'r reading உ.பி. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி - மாயாவதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை