பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல்

Ex- JK chief minister Farooq Abdullah detained under public safety law

by எஸ். எம். கணபதி, Sep 16, 2019, 12:40 PM IST

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லாவை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆக.5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நிகழக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மதிமுக நேற்று மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியாததால், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தது. பரூக் அப்துல்லாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவிக்க வேண்டுமென்று அதில் கோரப்பட்டது.

இம்மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் பாப்டே, நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காஷ்மீர் மாநில நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். இந்த சட்டம், பரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லா ஆட்சியின் போது, தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தின்படி, எவரையும் 2 ஆண்டுகள் வரை சிறைக் காவலில் வைக்கலாம்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

You'r reading பொது பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லாவுக்கு சிறை.. சுப்ரீம் கோர்ட்டில் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை